மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் போன்றவற்றை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தினால் இருமுறை ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டி வரும் என்று சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல் முற்றிலும் தவறானது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
கிரெடிட் கார்டு, வங்கி, காப்பீடு தொடர்பான சில சேவைகளுக்கு தற்போது சேவை வரியாக 15 சதவீத வரி விதிப்பு உள்ளது. ஜிஎஸ்டியில் நிதிச்சேவைகளுக்கு வரி விதிப்பு 18 சதவீதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் பணபரிவர்த்தனைக்கு இருமுறை ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும் என்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி வருகின்றன என்ற தகவலும் பரவி வருகிறது.
இவ்விளக்கத்தை மத்திய வருவாய்த் துறை செயலாளர் ஹஷ்முக் அதியா வெளியிட்டுள்ளார். தவறான தகவல்களை கொண்ட செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்றும் அவர் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.