முதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய இந்திய சென்செக்ஸ் - நிபுணர் விளக்கம்

முதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய இந்திய சென்செக்ஸ் - நிபுணர் விளக்கம்
முதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டிய இந்திய சென்செக்ஸ் - நிபுணர் விளக்கம்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் 400 புள்ளிகள் உயர்ந்து வணிகமாகிறது சென்செக்ஸ். இந்திய பங்குச்சந்தையில் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும்? என்பது குறித்தும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் சந்தை மூலதனம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம். 

கடந்த சில வாரங்களாக அந்நிய முதலீடுகள் அதிகரித்துவரும் நிலையில், இந்திய பங்குச்சந்தையில் முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டாலும் தற்போது மீண்டும் புதிய உச்சத்தை இந்திய பங்குச்சந்தைகள் தொட்டுள்ளன.

முதன்முறையாக வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 60,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 122 புள்ளி அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டிலிருந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டு பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகின்றன.

இதற்கு தற்போது பணப்புழக்கம் அதிகமாக இருப்பதே காரணமாகக் கூறப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கி பணப்புழக்கத்தை குறைத்துவிடும், பத்திரங்கள் வாங்குவதை நிறுத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதைக்கு அதற்கு சாத்தியமில்லை என்று அறிவித்திருப்பதால் தொடர்ந்து பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவும், பங்குச்சந்தைகளுக்கு முதலீடு தொடர்ந்து வரும் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. இதனால் பங்குச்சந்தைகள் உயர்ந்துகொண்டே வருகிறது.

இந்திய பங்குச்சந்தையில் என்ன மாதிரியான தாக்கம் இருக்கும்?

இதில் பல்வேறு விதமான அம்சங்கள் இருப்பினும், ஐபிஓ(IPO) என்கிற முறை நிறுவனங்கள் பங்குச்சந்தையிலிருந்து முதலீடுகளைத் திரட்ட உதவியாக இருக்கிறது. அதனால்தான், கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டில் நிறுவனங்கள் ஐபிஓக்கள் மூலம் தங்கள் பங்குகளை சந்தையில் முதலீடு செய்வதை பார்க்கமுடிகிறது. இது வங்கிகளிலிருந்து கடன் வாங்குவதைப் போல் அல்லாமல் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் முதலீட்டை அளிக்கிறது. இது புதிய தொழில்கள் உருவாகவும், தொழில்களை விரிவாக்கம் செய்யவும் வழிவகுக்கிறது. இது தொழில்துறையில் சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறது. வட்டிக்குறைப்பு குறித்த அமெரிக்க மைய வங்கியின் தகவலால் உலகமெங்கிலும் பங்குச்சந்தையில் உயர்வு காணப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் சந்தை மூலதனம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?

கடந்த ஆண்டிலிருந்தே பங்குச்சந்தைகள் அதிகரித்துவரும் காரணத்தால் திருத்தம் என்று சொல்லக்கூடிய வகையில் இது குறைவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஏனென்றால் பங்குச்சந்தைகள் ஏறும் வேகத்தைப்போன்றே வேகமாக இறங்கியும்விடும். தற்போது மளமளவென ஏற்றம் இருப்பதால் சற்று இறங்கி மீண்டும் ஏறுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே முதலீடு செய்வதற்களுக்கு லாபம் கிடைக்கிறது. அதேசமயம் புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் சற்று கவனத்துடன் செயல்படவேண்டும்.

இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் ஷ்யாம் சேகர் கூறுகையில், ‘’அடிப்படையில் தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து இந்தியா மீண்டு வரவேண்டும் என்றால் வளர்ச்சி இருக்கவேண்டும். வளர்ச்சி அவசியமென்றால் நிச்சயம் கடன் வளர்ச்சி அதிகமாக இருக்கவேண்டும். இன்று பலரும் கடன் வாங்கித்தான் முதலீடு செய்கின்றனர். இன்றைய வட்டிசூழலும் அதற்கு சாதகமாக இருக்கிறது. குறைந்த வட்டிவிகிதங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் முக்கியமானவை ஆகின்றன.

நாம் மீண்டும் நல்லநிலைக்கு வர வங்கித்துறை வளர்ச்சியும் மிகமிக முக்கியமானது. அதேபோல் ஐடிஐ துறையும் தற்போது நல்ல வளர்ச்சிப்பாதைக்கு திரும்பி இருக்கிறது. இதுபோன்ற வளர்ச்சியில் இருக்கக்கூடிய துறைகளில் முதலீடு செய்வது அவசியம். இதில் கருத்தில்கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம், அடுத்த ஓராண்டில் நிச்சயம் அரசு தனது பங்குகளை பொதுமக்கள் அல்லது தனியாருக்கு விற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்று பங்குகள் அரசிடமிருந்து அவர்களைவிட சிறப்பாக மேலாண்மை செய்யக்கூடியவரிகளிடம் செல்லும்போது அந்த நிறுவனங்களின் மதிப்பு நிச்சயம் கூடும். எனவே அதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதே சிறந்தது’’ என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com