மாறன் குடும்பத்தில் பிளவு? கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்.. நடந்தது என்ன?
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி மாறன் உள்ளிட்ட 8 நபர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதன்படி, சன் டிவி மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் கலாநிதி மாறன் ஈடுபட்டுள்ளதாக தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்கு தானே கலாநிதி மாறன் ஒதுக்கீடு செய்துகொண்டதாகவும்,இதன் மூலம் 60 சதவீத உரிமையை சன் குழுமத்தில் அவர் பங்குதாரர்களிடம் கேட்காமலேயே எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சன் குழுமத்தில் கலாநிதி மாறனை தவிர்த்து மற்ற குடும்ப உறுப்பினர்களின் பங்குகள் 50 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம், 2023 ஆம் ஆண்டு வரை கலாநிதி மாறன் 5 ஆயிரத்து 926 கோடி ரூபாய் லாபம் பெற்றதாகவும், 2024 ஆம் ஆண்டு மட்டும் 455 கோடி ரூபாய் லாபம் ஈட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு அன்றைய காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட் டுள்ளது. இவ்வாறான மோசடிகளின் மூலம் சன் பிக்சர்ஸ், சன் டைரக்ட், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணிகளை கலாநிதி மாறன் தன்வசப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே சன் டிவி பங்குகளை கையாளுவது 2003-ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நோட்டீஸில், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தங்களது சகோதரி அன்புக்கரசிக்கு கலாநிதி மாறன் 500 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக மத்திய அரசின் விசாரணை அமைப்பை அணுக திட்டமிட்டுள்ளதாகவும் தயாநிதி மாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10-ஆம் தேதியிட்ட இந்த நோட்டீஸ், சென்னை சாந்தோமைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ. சுரேஷ் மூலம் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, ரவி ராமமூா்த்தி, நடராஜன், சிவ சுப்பிரமணியன், ஸ்ரீதா் சுவாமிநாதன், சுவாமிநாதன் சரத் குமாா் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.