சொகுசுகார் சந்தையை 7 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிய கொரோனா: ஆடி நிறுவனம் தகவல்
கொரோனா பாதிப்பு இந்தியாவின் சொகுசு கார் சந்தையை கடுமையாக தாக்கியுள்ளது. இச்சந்தை 2014-2015 நிலையை அடைய இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் இந்தியாவில் சொகுசு கார் விற்பனையை கடுமையாக தாக்கியுள்ளது. இதனை மீட்டெடுக்க ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகும். மேலும் 2014-2015 ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட நிலைகளை அடையவே இன்னும் இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் கூறியுள்ளார். "விற்பனை அதிகரித்து வருவதாகவும், நேர்மறையான உணர்வுகள் இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நாமும் வளருவோம் என்றும் நாங்கள் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அடித்தளம் மிகவும் குறைந்துவிட்டது" என்றும் அவர் தெரிவித்தார்.
2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் சொகுசு கார் விற்பனை சுமார் 30,000 யூனிட்களாகவும், 2015 ஆம் ஆண்டில் சுமார் 31,000 யூனிட்டுகளாகவும் இருந்தது. மெர்சிடிஸ், பி.எம்.டபிள்யூ, ஆடி, ஜே.எல்.ஆர் மற்றும் வோல்வோ ஆகிய முதல் ஐந்து நிறுவனங்களை உள்ளடக்கிய இந்திய சொகுசு கார் சந்தை, 2019-ல் கிட்டத்தட்ட 35,500 யூனிட்களை விற்றுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2018 ல் 40,340 யூனிட்டுகளாக இருந்தது. ஒட்டுமொத்த வாகனத் துறையும் இந்த ஆண்டு பெரிய சரிவை சந்தித்துள்ளது, ஆடம்பரப் பிரிவு கார் விற்பனைக்கு கடந்த ஆண்டு கூட ஒரு மோசமான ஆண்டு" என்றும் தில்லன் கூறினார்.