விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நெய் பாட்டிலுக்கு 2 ரூபாய் கூடுதலாக வசூலித்த பல்பொருள் அங்காடிக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தைச் சேர்ந்த சத்தியபாமா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு அப்பகுதியில் இயங்கும் நியூ என்.டி.ஆர் பல்பொருள் அங்காடியில் நெய் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆவின் நிறுவன தயாரிப்பான அந்த நெய் பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த அதிகப்பட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதலாக 2 ரூபாயை பல்பொருள் அங்காடி பெற்றுள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு அங்காடி ஊழியர்கள் முறையான விளக்கம் அளிக்காமல் புகார்தாரரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனையடுத்து சத்யபாமா, மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணையில் குறைந்தபட்ச விற்பனை விலையை விட அதிக தொகைக்கு நெய் பாட்டில் விற்பனை செய்தது உறுதியானது. எனவு சம்பந்தப்பட்ட பல்பொருள் அங்காடியை நடத்திவரும் ஷெரிபுதீன், சம்சுதீன், பஹுருதீன், தீவான்பாபு, நூருதீன் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.5 ஆயிரம் மற்றும் அவர்கள் அதிகமாக வசூல் செய்த ரூ.2 ஆகியவற்றை சேர்த்து 15,002 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டார்.