மத்திய பட்ஜெட் 2025 | ”தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரிப்பார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2025 -26) மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் அறிவிப்பு பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும் அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அதிக வரி செலுத்தும் தமிழ்நாட்டை கண்டுகொள்ளாமல், நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளவும் தேர்தல் கணக்குகளோடும் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் வஞ்சகப் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.