பட்ஜெட் 2025 | “2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன” - குடியரசு தலைவர் உரை!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (ஜன.31) தொடங்கியுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவதற்கு முன்பு, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பின்னர், நாடாளுமன்றத்தில் செங்கோல் முன்செல்ல பின்தொடர்ந்து சென்றார் திரௌபதி முர்மு. பின்னர் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனையடுத்து, உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர், கும்பமேளாவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தநிலையில், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டோருக்கு மரியாதை தெரிவித்து தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து தன் உரையில் குடியரசுத் தலைவர், “விவசாயிகளுக்கு உதவித்தொகையாக ரூ 41, 000 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2.25 கோடி சொத்து உரிமை அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் மருந்தகங்கள் மூலமாக 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். 2047ல் வளர்ந்த பாரதம் என்ற நமது இலக்கு உலகை கவர்ந்துள்ளது.
இன்று பெண்கள் அதிக எண்ணிக்கையில் போர் விமானங்களை இயக்குவது, காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது நாடாளுமன்றத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்" என்று பேசியுள்ளார்.