மத்திய பட்ஜெட்டுக்கு முன் 'அல்வா' கிண்டுவது ஏன்?
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நடைபெறும் 'அல்வா' நிகழ்ச்சி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்!
2021 பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. பட்ஜெட் அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் 'அல்வா' நிகழ்ச்சி இரண்டு நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நார்த் பிளாக்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பிற உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பாரம்பரிய அல்வா நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அரசின் பட்ஜெட் ஆவணத்தின் அச்சிடும் பணியின் தொடக்கத்தைக் குறிக்கும். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பட்ஜெட் காகிதத்தில் அச்சிடப்படவில்லை. சுதந்திர இந்திய வரலாற்றில் முதல்முறையாக பட்ஜெட் காகிதமற்ற வடிவத்தில் வழங்கப்பட இருக்கிறது.
'அல்வா' நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது... ஏன்?
ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, பட்ஜெட்டின் ரகசியத்தைப் பாதுகாப்பதற்காக இதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை பூட்டிய அறைக்குள் இருப்பார்கள். இதற்கு முன்பாக ஒவ்வொரு வருடமும் அல்வா நிகழ்ச்சி நடைபெறும். இது பட்ஜெட் தயாரிக்கும் பணியின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முயற்சிகளை அங்கீகரிக்கிறது.
இந்த சடங்கின்படி, ஒரு பெரிய பாத்திரத்தில் அல்வா தயாரிக்கப்பட்டு, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிக்கும் செயல்முறையுடன் நேரடியாக தொடர்புடைய அனைவருக்கும் அல்வா வழங்கப்படுகிறது.
அல்வா பரிமாறப்பட்டவுடன் பட்ஜெட் தாக்கல் முக்கியத்துவம் பெறுகிறது. அச்சிடும் செயல்முறை மற்றும் பட்ஜெட் தயாரிக்கும் செயல்முறையுடன் நேரடியாக தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை நிதி அமைச்சகத்தின் நார்த் பிளாக்கில் தங்க வேண்டும்.
அல்வா நிகழ்ச்சிக்குப் பிறகு, பட்ஜெட் விவரங்கள் ரகசியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும், கசிவுகள் ஏற்படாமல் தடுப்பதற்கும், நார்த் பிளாக்கில் தங்கும் அதிகாரிகள், பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் வரை, சுமார் 10 நாள்கள் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க செல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் நிதி அமைச்சகத்தின் மிக மூத்த அதிகாரிகள் மட்டுமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வளவு ரகசியமாக பட்ஜெட் ஆவணங்கள் தயார் செய்யப்படும்.
இந்த அல்வா நிகழ்ச்சி எப்போது தொடங்கப்பட்டது என்ற சரியான குறிப்புகள் கிடைக்கவில்லை. எனினும், இந்திய பாரம்பரியத்தின் எந்தவொரு பணியையும் தொடங்கும் முன் இனிப்புடன் தொடங்க வேண்டும் என்ற முறைப்படி அல்வா விருந்து நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 20-ல் அல்வா நிகழ்ச்சி நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
மத்திய பட்ஜெட் 2021-22 முதல் முறையாக காகிதமில்லா வடிவத்தில் வழங்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. ஏனெனில், அச்சிடும் செயல்முறை காரணமாக நிதி அமைச்சகத்தின் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பதினைந்து நாள்கள் நார்த் பிளாக்கின் அடித்தளத்தில் தங்க நேரிடும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த ஆண்டு இந்த செயல்முறை ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அது ரத்து செய்யப்பட்டு காகிதமில்லா வடிவில் பட்ஜெட் வழங்கப்பட உள்ளது.