பிட்காயின் வாங்க ஆசைப்பட்டு ரூ.3.5 கோடியை இழந்த பெங்களூர் நபர்
பெங்களூர் நகரை சேர்ந்த 37 வயதான கவுதம், பிட்காயின் வாங்க மேற்கொண்ட முயற்சியில் மோசடி நபரிடம் 3.5 கோடி ரூபாயை இழந்துள்ளார். இது குறித்து அவர் பெங்களூர் தெற்கு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
“அண்மையில் குர்ணால் அனூர் சந்தரன்னா என்ற நபர் எனக்கு அறிமுகமானார். தன்னை கிரிப்ட்டோ கரன்சி டீலர் என அறிமுகம் செய்து கொண்டார் அவர். எனது நண்பர் ரமேஷ் மூலமாக குர்ணால் எனக்கு அறிமுகமானார். இந்த வணிகம் மூலமாக ரமேஷ் அதிகம் பணம் ஈட்டியதாகவும். அதற்கு குர்ணால் உதவியதாகவும் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.
அவரது பேச்சை நம்பி நானும் குர்ணால் இடம் பிட்காயின் வாங்க பணம் கொடுத்தேன். சுமார் 3.5 கோடி ரூபாயை வங்கி மூலமாக அவருக்கு அனுப்பி இருந்தேன். ஆனால் அவர் எனக்கு சொன்னப்படி பிட்காயின் வாங்கித் தரவில்லை. நானும் கொடுத்த பணத்தை கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை. ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்” என தனது புகாரில் தெரிவித்துள்ளார் கவுதம்.
அதையடுத்து போலீசார் மோசடி செய்த குற்றத்திற்காக இந்திய தண்டனை சட்ட பிரிவு 420இன் கீழ் குர்ணால் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

