முந்திரி ஏற்றுமதி கவுன்சிலை மூடாமல் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் முந்திரி ஏற்றுமதியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முந்திரி ஏற்றுமதி கவுன்சில் மூலம் உலக அளவில் இந்தியாவில் இருந்து முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது. முந்திரி ஏற்றுமதியை உலக அளவில் சந்தைப்படுத்துதல் ஏற்றுமதியாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் சரி செய்தல், பல நாடுகளில் முந்திரி குறித்து பொருட்காட்சிகள் நடத்தி முந்திரி விற்பனையை அதிகப்படுத்துதல் போன்ற பணிகளை ஏற்றுமதி முந்திரி ஏற்றுமதி கவுன்சில் செய்து வருகிறது.
இந்நிலையில், இந்த கவுன்சிலை கலைக்க சிலர் அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. லாப நோக்கத்திற்காக, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரமில்லாத முந்திரிகளை வியாபாரிகள் இறக்குமதி செய்வதாகவும் அதன் காரணமாக, முந்திரி ஏற்றுமதி கவுன்சிலை கலைக்க சிலர் திட்டமிடுவதாகவும் ஏற்றுமதியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஏற்கெனவே முந்திரி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கொடுத்து வந்த 5% ஊக்கத் தொகையை மத்திய அரசு முற்றிலும் நிறுத்தியுள்ளதால் முந்திரி ஏற்றுமதியாளர்கள் சற்று அச்சமடைந்துள்ளனர்.
முந்திரி ஏற்றுமதி கவுன்சிலை மூடினால் முந்திரி ஏற்றுமதிக்கு தனி கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும், இதனால், அந்த தொழிலை நம்பியுள்ள 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் எனவும் ஏற்றுமதியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அந்நிய செலாவணியில் அதிக வருவாய் ஈட்டித் தரும் முந்திரி ஏற்றுமதி கவுன்சிலை எக்காரணம் கொண்டும் மூடக் கூடாது என்பதே அவர்களது கோரிக்கையாக உள்ளது.