பாகிஸ்தான்
பாகிஸ்தான் முகநூல்
உலகம்

பாகிஸ்தான் | 2 பெண்கள், 4 ஆண்கள்.. ஒரே பிரசவத்தில் பிறந்த 6 குழந்தைகள்! தாயும், சேய்களும் நலம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

பாகிஸ்தானில் பெண் ஒருவருக்கு ஒரே பிரவசவத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் உள்ள ஹசிரா காலனியில், ஜீனத் வாஹித், அவரது கணவர் முகமது வாஹித்துடன் வசித்து வருகிறார்.

27 வயது நிரம்பிய ஜீனத் கர்ப்பமாக இருந்தநிலையில், கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால், ராவல்பிண்டியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு மணி நேரத்திலேயே அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் மற்றும் 4 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் ஜீனத். இது ஜீனத்திற்கு முதல் பிரசவம் என்பதும், ஆனால், சுகப்பிரசவம் முறையில் பிரசவம் ஏற்படவில்லை என்றும், மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தாயும் சேய்களும் நலமாக இருப்பதாகவும் , குழந்தைகளின் நலம் கருதி குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்பு என்பதே தனி சந்தோஷத்தை அளிக்கும்நிலையில், ஒரே நேரத்தில் 6 குழந்தைகளின் பிறப்பு என்பது பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.