உலகம்

ட்ரம்ப் மீது தவறான குற்றச்சாட்டு: மன்னிப்புக் கேட்டார் ஹாரிபாட்டர் எழுத்தாளர்

webteam

அமெரிக்க அதிபர் மீது தவறான குற்றச்சாட்டு கூறியதற்காக ஹாரிபாட்டார் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் மன்னிப்புக் கோரினார். 

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் சமீபத்தில் விழா ஒன்று நடந்தது. அந்த விழாவின்போது மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவனுடன் கைகுலுக்க ட்ரம்ப் மறுப்புத் தெரிவித்ததாக ரௌலிங் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், ட்ரம்ப் அந்த சிறுவனைப் புறக்கணிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் தொடர்பாக மாண்டி என்ற அந்த சிறுவனின் தாயாரான கெல்லி, ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் ட்ரம்ப் எனது மகனைப் புறக்கணிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவருடன் கைகுலுக்க எனது மகன் மாண்டி முயற்சிகூட செய்யவில்லை. இந்த தகவலை ரௌலிங்கிடம் யாரேனும் கொண்டு சேருங்கள் என்று பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், ட்ரம்ப் மீது தவறான குற்றச்சாட்டை கூறியதற்காக ஜே.கே.ரௌலிங் மன்னிப்பு கோரியிருக்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், அந்த சிறுவனுடன் ட்ரம்ப் கைகுலுக்கியதை நம்பத் தகுந்த நபர்கள் மூலம் தற்போது அறிந்து கொண்டதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த சிறுவன் அல்லது அவரது குடும்பத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் ஜே.கே.ரௌலிங் பதிவிட்டுள்ளார். உலக அளவில் புகழ்பெற்ற ஹாரிபாட்டார் வரிசை நாவல்களை எழுதியவர் ஜே.கே.ரௌலிங்.