மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது என தி லான்செட் என்ற மருத்துவ பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
உலகில் அதிக மாசுபாடு நாடுகள் மற்றும் குறைந்த மாசுபாடு உள்ள நாடுகள் பட்டியலை தி லான்செட் என்ற பொது மருத்துவ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, உலகளவில் உயிரிழப்பவர்களில் 6-ல் ஒருவர் மாசுபாடு காரணமாக இறப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆய்வின் அடிப்படையில் உலகளவில் 90 லட்சம் பேர் மாசுபாடு காரணமாக உயிரிழந்திருப்பதாகவும், இந்த உயிரிழப்புகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளிலேயே நிகழ்ந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இதயநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்றவற்றிற்கு மாசுபாடு தான் முக்கிய காரணமாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் உலகளவில் மாசுபாடு காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில், வங்கதேசம் முதலிடத்திலும், சோமாலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதில் இந்தியா 5வது இடத்திலும், பாகிஸ்தான் 10வது இடத்திலும் உள்ளன. உலகளவில் மாசுபாடு காரணமாக குறைந்த அளவு உயிரிழப்புகள் ஏற்படும் நாடுகளில் புருனே முதல் இடத்திலும், ஸ்வீடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.