உலகம்

"பெண்களின் நிலை கவலையளிக்கிறது" - ஆப்கனுக்கு நிதியுதவியை நிறுத்திய உலக வங்கி

jagadeesh

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டுக்கான நிதியுதவியை உலக வங்கி நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன. இதற்கிடையில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதற்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், ஆப்கானிஸ்தானை தனிமைபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை நிறுத்திக்கொள்வதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து, உலக வங்கியின் செய்தித்தொடர்பாளர் மார்சலா சான்ச்ஹெஸ் "ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதி உதவியை உலக வங்கி நிறுத்திக்கொள்கிறது. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் அங்குள்ள நிலைமை, குறிப்பாக பெண்களின் முன்னேற்றம் குறித்து மிகுந்த கவலை கொள்கிறோம்" என்றார்.

முன்னதாக ஆப்கன் வளர்ச்சித் திட்டங்களுக்காக 5.3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவாக உலக வங்கி அறிவித்திருந்தது. மேலும் ஆப்கன் மறுசீரமைபுக்காக பல்வேறு திட்டங்களுக்கான நிதியையும் உலக வங்கி திரட்டியது குறிப்பிடத்தக்கது.