எகிப்து நாட்டில் இருந்து வறுமையின் காரணமாக லிபியாவிற்கு வேலை தேடி சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உணவு, தண்ணீரின்றி உயிரிழந்துள்ளனர். வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களாலேயே இதுபோன்ற அவலநிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எகிப்து நாட்டுத் தலைநகர் கெய்ரோ அருகே இருக்கும் மினியா கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பம் வறுமையால் வாடுகிறது. காரணம் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம். வறுமை ஒருபுறம் வாட்டியதால் வேலைதேடி லிபியாவிற்கு சென்ற இந்த கிராமத்தை சேர்ந்த 22 பேர் பாலைவனத்தில் உணவு, தண்ணீரின்றி சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இடைத்தரகர்களை நம்பி இவர்கள் வேலைக்குச் சென்றபோது இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எகிப்தை சேர்ந்தவர்கள் லிபியாவிற்கே வேலை தேடி செல்கிறார்கள்.
இதனிடையே, வேலை தேடி சட்டவிரோதமாக லிபியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் எகிப்தியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதுகுறித்து லிபியாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் தாயான நபிலா ஹசிப் கூறும்போது, "படிப்பிற்கு தேவையான பணத்தைப் பெற எனது மகன் லிபியா செல்ல வேண்டும் என்று கூறினான். ஆனால் படிக்க வேண்டாம் என்று கூறி இங்கேயே இருக்க வலியுறுத்தினேன். ஆனால், படிப்பதற்கு பணம் வேண்டும் என்று கூறி அங்கே சென்றான். தற்போது அங்கே அவன் கைது செய்யப்பட்டுள்ளான். எனது மகன் உயிருடனோ அல்லது பிணமாகவோ வேண்டும். எனது மகனை நினைத்து கடந்த 10 மாதங்களாக மிகவும் கவலையடைந்துள்ளேன்" என்றார்.
எகிப்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள வேளையில், விலைவாசியும் உயர்ந்துள்ளாதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், எகிப்தில் 12 சதவிகித மக்களுக்கே வேலையில்லை என்று கூறும் அரசு, இப்பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.