உலகம்

பார்வையை இழக்கவுள்ள குழந்தைகளை உலக சுற்றுலா அழைத்து செல்லும் கனடா தம்பதி!

ச. முத்துகிருஷ்ணன்

விரைவில் பார்வை இழக்கவுள்ள தங்கள் குழந்தைகளை உலக நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு அழைத்து செல்லும் கனடாவை சேர்ந்த தம்பதியினரின் செயல் நெகிழ வைக்கிறது. செபாஸ்டியன் பெல்லெட்டியர் - எடித் லேமே என்ற தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் மகள் மியா, இரு மகன்கள் கொலின் மற்றும் லாரண்ட் ஆகிய மூவரும் ரெட்டினிடிஸ் பிக்மெண்டோசா (Retinis pigmentosa) என்ற அரிய வகை கண் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என்பதால் காலப்போக்கில் பார்வை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே தங்களது குழந்தைகள் பார்வையை இழப்பதற்கு முன் உலகை சுற்றிக் காட்ட முடிவு செய்த தம்பதிகள், கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

“நான் நினைத்தேன். நான் அவர்களுக்கு ஒரு புத்தகத்தில் யானையைக் காட்டப் போவதில்லை. உண்மையான யானையைப் பார்க்க அவளை அழைத்துச் செல்லப் போகிறேன். அவர்களுடைய காட்சி நினைவகத்தில் சிறந்த, மிக அழகான படங்களை நிரப்பப் போகிறேன்.” என்று கூறினார் லேமே. நமீபியா, ஜாம்பியா, தான்சானியா, துருக்கி, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்ற இந்த குடும்பம், இப்போது இந்தோனேசியாவில் முகாமிட்டுள்ளது.