உலகம்

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடும், பஞ்ச நிலைமையையும் உருவாகுமா? அமைச்சர் விளக்கம்

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடும், பஞ்ச நிலைமையையும் உருவாகுமா? அமைச்சர் விளக்கம்

நிவேதா ஜெகராஜா

இலங்கையில் விரைவில் உணவுத்தட்டுப்பாடும், பஞ்ச நிலைமையையும் உருவாகும் என்றும், இலங்கை அரசு விரைவில் அப்படியான சூழலை எதிர்கொள்ளப் போவதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்திருந்தது. இச்செய்திகளை இலங்கை அரசாங்கம் சார்பில் நிதி மூலதனச் சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தற்போது நிராகரித்துள்ளார்.

அத்துடன் சீனாவின் கடன் சுமையில் சிக்கி, இலங்கை மேலும் பல பொருளாதார அழிவுகளை சந்திக்கப் போவதாக வெளியாகிய விமர்சனங்களையும் நிராகரிப்பதாக இலங்கையின் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “இலங்கை இன்னும் சில மாதங்களில் உணவுப் பஞ்சத்திற்கும், கடன்சுமைக்கும் வீழ்ந்துவிடுவதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் கடந்த நாட்களில் வெளியிடப்பட்டிருந்தன. சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளதால் நாட்டில் நிதி மற்றும் உணவு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் என சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை அடிப்படையற்றது. கோவிட் தாக்கத்தினால் இலங்கை மட்டுமல்ல, பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த எத்தனையோ நாடுகள் பொருளாதார ரீதியிலேயே ஏதோவொரு வழிமுறையில் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுத் தேவைக்கான அனைத்து விஷயங்களும் மேலும் சில மாதங்களுக்குக் களஞ்சியப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டிற்குள் உணவுத்தட்டுப்பாடோ, ஏனைய தட்டுப்பாடுகளோ ஏற்படாது என்பதை உறுதிப்படக் கூறுகின்றேன். தற்சமயம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முழுவீச்சாக நடவடிக்கை எடுத்து வருவதோடு எதிர்காலத்தில் இப்படியான நிலைமை வராதபடிக்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படக் காரணமாக சுற்றுலாத்துறை மூடப்பட்டுள்ளமை போன்ற காரணிகள் தாக்கத்தை செலுத்தியிருக்கின்றன. அதனால்தான் வாகனம் போன்ற சில ஆடம்பரப் பொருட்களுக்கான இறக்குமதி இடைக்காலத்தடையை விதிக்கப்பட்டிருக்கிறது. எவ்வாறாயினும் மீண்டுமாக ஒருமுறை தெரிவிக்கின்றேன்... அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது என்பதோடு மக்களின் அன்றாக செயற்பாடுகளுக்கும் தாக்கம் ஏற்படாது. அதேபோல இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகேட்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கான அவசியம் இப்போது எமக்கு இல்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் நாம் உதவிகோரமாட்டோம்” என்றார்.