உலகம்

சிங்கப்பூர் இந்த அளவுக்கு பாதுகாப்பான நாடா? - வைரலாகும் டிக்டாக்கரின் செயல்முறை விளக்கம்!

JananiGovindhan

உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்பதாவது இடத்தை கொண்டிருக்கும் சிங்கப்பூர் எந்த அளவுக்கு உண்மை என்பதை டிக் டாக் பயனர் ஒருவர் செயல்முறையாக அதனை நிரூபித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு பலரையும் ஆச்சர்யமடைய வைத்திருக்கிறது.

Uptin Saiidi என்ற டிக்டாக் பயனர், எந்த அளவுக்கு சிங்கப்பூர் பாதுகாப்பானது என அறிய திட்டமிட்டு, தனது விலைமதிப்புள்ள லேப்டாப்பை பிரபல உணவகமான ஸ்டார்பக்ஸில் விட்டுவிட்டு கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது, அவர் விட்டுச் சென்ற லேப்டாப் அதே இடத்திலேயே இருந்ததை கண்டு வியந்துப் போயிருக்கிறார்.

இதனையடுத்து 2021ல் சிங்கப்பூர் அரசு வெளியிட்ட சில புள்ளிவிரங்களை இணைத்து வீடியோவாகவும் பதிவேற்றிருக்கிறார். அதில், “சிங்கப்பூரில் கடந்த 250 நாளில் பொதுவாக கருதப்படும் எந்த குற்றமும் அரங்கேறவில்லை எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படியே என்னுடைய லேப்டாப்பும் வைக்கப்பட்ட இடத்திலேயே இருந்திருக்கிறது.

நேர்மையும், வெளிப்படைத்தன்மையும்தான் இங்கே இருக்கும் கலாசாரத்தின் பெரும் பகுதியாக இருக்கிறது. ஏனெனில், சிங்கப்பூரில் உள்ள மக்களுக்கான அடிப்படைத்தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படுகிறது. ஆகையால் குற்றச் சம்பவங்களில் ஈடுபட வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.

இதுபோக ஜீரோ அளவிலான குற்ற நிகழ்வுகள் இருப்பதற்கு கண்காணிப்பு கேமிராக்கள் மிகப்பெரிய பங்காற்றுகிறது. இதையும் மீறி எவரேனும் குற்றங்களில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தே விதிக்கப்படும் என்ற சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.” என டிக்டாக்கர் தெரிவித்துள்ளார்.

Uptin Saiidi-ன் இந்த வீடியோ வைரலான நிலையில், பயனர் ஒருவர் “நான் சிங்கப்பூரில் வசித்திருந்த போது பேருந்து நிலையத்தில் என்னுடைய மொபைல் ஃபோனை விட்டுவிட்டேன். மறுநாள் சென்று பார்த்தபோது ஒரு பிளாஸ்டிக் பையில் என்னுடைய ஃபோன் வைக்கப்பட்டு தொலந்துபோன ஃபோன் என எழுதியும் வைக்கப்பட்டிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் ஒருவர் “இதுவே லண்டனாக இருந்தால் லேப்டாப் முன்னாடியே உட்கார்ந்திருந்தாலும் களவாடிவிடுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.