model image google gemeni
உலகம்

இந்தியாவையே மிரட்டிய Gen Z.. உலகிலும் அரசியல் மாற்றம்.. Pak-இல் உருவாகாதது ஏன்?

பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் என பாகிஸ்தானில் இருந்தாலும் உலகையே மிரட்டும் Gen Z இயக்கம் அங்கு உருவாகவில்லை. அதற்குக் காரணம் என்ன? வாருங்கள் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

Prakash J

இப்போதெல்லாம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது, Gen Z தலைமுறை. கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக அரசியலில் Gen Z தலைமுறை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த இளைஞர் இயக்கம், பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறையைக் குறிக்கிறது. இவர்களின் இயக்கங்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு, ஊழல், ஜனநாயகம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் அரசின் பொறுப்புணர்வு போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டவை. சமூக ஊடகங்களுடன் வளர்ந்த இந்த தலைமுறை, கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளில் அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய சக்தியாக மாறியுள்ளது.

cjp protest in delhi

குறிப்பாக இவர்களின் போராட்டங்கள் வங்கதேசம், இலங்கை, நேபாளம், செர்பியா, கென்யா, சிலி உள்ளிட்ட நாடுகளில் கடந்த காலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. உலகத்தை உலுக்கிய இந்த இயக்கங்கள், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில், டெல்லியில் CJP நடத்திய போராட்டத்தில் இணைந்த இந்தக் குழுவினர், இந்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தனர். இதனால், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகினார்.

இந்தச் சூழலில், பொருளாதார நெருக்கடி இருந்தபோதும் அண்டை நாடான பாகிஸ்தானில் ஒருங்கிணைந்த Gen Z இயக்கம் உருவாகவில்லை என்பது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பாகிஸ்தானில் அரசியலில் ராணுவத்தின் செல்வாக்கு அதிகம். பெரிய அளவிலான போராட்டங்கள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் மாணவர்கள் நீண்டகால இயக்கங்களை உருவாக்க அச்சப்படுகின்றனர். அடுத்து, அங்கு பல பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்கள் பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது செயலிழந்துள்ளன.

pakistan

இதனால் இளைஞர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு குறைவாக உள்ளது. பாகிஸ்தானில் இன, மாகாண, மத மற்றும் அரசியல் பிளவுகள் அதிகம். இதனால் பல்வேறு அதிருப்திகளை ஒரு பொதுவான தேசிய இயக்கமாக மாற்றுவது கடினமாகிறது. சமூக ஊடகக் கண்காணிப்பு, இணையத் தடை, போராட்டங்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் போன்றவை பெரிய அளவிலான இயக்கங்கள் உருவாகுவதைத் தடுக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் பல இளைஞர்கள் வேலை, வருமானம் மற்றும் குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, நீண்டகால போராட்டங்களில் ஈடுபடுவது அவர்களுக்கு சாத்தியமற்றதாகிறது. வங்கதேசம் அல்லது இலங்கையில் இருந்தது போல, நாடு முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாணவர் அல்லது இளைஞர் தலைமையமைப்பு பாகிஸ்தானில் உருவாகவில்லை.

model image

சுருக்கமாகச் சொல்வதென்றால், பாகிஸ்தானில் Gen Z இயக்கம் உருவாகாததற்கு ராணுவ ஆதிக்கம், மாணவர் அமைப்புகளின் பலவீனம், அரசியல்-சமூக பிளவுகள், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் ஒருங்கிணைந்த தலைமையின் இல்லாமை போன்றவையே முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில், ஒவ்வொரு நாட்டின் அரசியல் அமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள், நீதித்துறை மற்றும் குடிமக்கள் சுதந்திரத்தின் அளவைப் பொறுத்தே Gen Z இயக்கங்களின் வெற்றி அல்லது தோல்வி தீர்மானிக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.