Seychelles  web
உலகம்

உலகளவில் செஷெல்ஸ் முக்கியத்துவம் பெறுவது ஏன்?

இந்தியப் பெருங்கடலில் கடல் வணிகமும் பாதுகாப்பும் கட்டுப்படுத்தும் மூலோபாயத் தளமாக செஷெல்ஸ் ஏன் உலக அதிசக்திகளின் கவனத்தை ஈர்க்கிறது?

PT WEB

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள சிறிய தீவு நாடான செஷெல்ஸ், பொருளாதார அல்லது ராணுவ வலிமை இல்லாதபோதும், புவியியல் ரீதியில் மிக முக்கியமானது. சூயஸ் கால்வாய், பாப்-எல்-மண்டேப் நீரிணை, நன்னம்பிக்கை முனை வழியாக செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு, கண்காணிப்பு, கடல் வணிக பாதைகள் அனைத்துக்கும் இது முக்கிய மையமாக திகழ்கிறது.

செஷல்ஸ் என்பது இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்க கண்டத்திற்கு அருகே உள்ள சுமார் 455 சதுர கிலோ மீட்டர் பரப்பு மட்டுமே கொண்ட சின்னஞ்சிறு தீவு நாடு. சென்னை மாநகரத்தின் பரப்பளவு மட்டுமே கொண்டுள்ள இந்நாடு பொருளாதார ரீதியிலோ ராணுவ ரீதியிலோ வலிமை கொண்டதல்ல..ஆனால் புவியியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் மிக்கது. உலகின் கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்கும் கடல் பகுதியில் இது இருப்பதால் கடல் வணிக ரீதியில் முக்கியத்துவம் பெறுகிறது.

Seychelles

குறிப்பாக, சூயஸ் கால்வாய் (Suez Canal) மற்றும் பாப்- எல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணை வழியாக அரபிக்கடலுக்குள் நுழையும் கப்பல்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) வழியாகப் பயணிக்கும் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும், அவற்றின் பாதுகாப்பிற்கும் இந்தத் தீவின் இருப்பிடம் மிக முக்கியமானது. மேலும் செஷல்ஸின் அமைவிடம் பாதுகாப்பு ரீதியிலான கடற்பகுதி கண்காணிப்புக்கும் அவசியான இடமாக உள்ளது.

இந்தியா தனது தென் கடல் எல்லையைப் பாதுகாக்கவும், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பைத் தன் வசம் வைத்திருக்கவும் செஷல்ஸின் கடலோரப் பகுதிகள் தேவைப்படுகின்றன. இதனால்தான் அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா, சீனா ஆகிய பெரிய நாடுகள் இந்தச் சிறிய தீவில் தங்களின் ரேடார் மையங்களையும், கண்காணிப்புத் தளங்களையும் அமைக்க போட்டிப் போடுகின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டுதான் செஷல்ஸ் உடன் இந்தியா நெருங்கிய நட்பை பராமரித்து வருகிறது. செஷல்ஸ் மக்கள் தொகையில் சுமார் 10% பேர் இந்தியர்கள் என்பதும் இந்த உறவு வலுப்பட காரணமாக உள்ளது