Viral Green House PT
உலகம்

யாருப்பா அந்த இன்ஜினியர்? மலை போல் நின்ற வைரல் பச்ச வீடு! நேபாள வெள்ளம் - நடந்த அதிசயம்!

நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்படாமல் இருந்த பச்சை நிற வீட்டின் கட்டுமானம் எப்படி வலுவாக இருந்தது என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

இமயமலையில் உள்ள பனிப்பாறை ஒன்று உருகியதால், நேபாளத்தின் கோஷி ஆற்றில் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பனிப்பாறையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயமாகியிருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நேபாளம் மட்டுமின்றி, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியிலும், இந்த வெள்ளம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு கொத்து கொத்தாக உயிர்களை பறித்த, சுனாமி போல் வந்த வெள்ளத்துக்கே, ஒரு வைரல் பச்சை நிற வீடு சவால் விடுத்திருக்கிறது.

அதாவது, மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த நேபாள வெள்ளத்தில் சிக்கி அருகில் இருந்து ஒட்டுமொத்த குடியிருப்புகளும் அடித்து செல்லப்பட்டபோது, நடுவில் இருந்த பச்சை நிற வீட்டையும் வெள்ளம் தாக்கியது. வீடு முழுவதையும் சுனாமி போல் வந்த வெள்ளம் சூழ்ந்துக் கொண்டிருந்தபோது வீட்டின் மாடியில் குடும்ப உறுப்பினர்கள் சிக்கித் தவித்துள்ளனர். உயிருக்கு ஆபத்து வந்துவிடும் என அவர்கள் கவலையாக இருந்தபோதிலும், ஒரு துரும்பு கூட அந்த வீட்டில் அசையவில்லை என்று கூறப்படுகிறது.

பின்னர், அந்த வீட்டில் சிக்கியிருந்த குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பு படையினர் மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, அந்த பச்சை நிற வீட்டின் கட்டுமானத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்த வீடு மிகப்பெரிய வெள்ளத்தையும் தாக்குப் பிடித்தது எப்படி என்ற விவரங்கள் தெரியவந்துள்ளது.

Nepal Flood

அதன்படி, இமயமலையில் பொதுவாக கட்டப்படும் வீடுகள் போல் இல்லாமல், கான்கீரிட் மூலம் கட்டப்பட்டதால், வீட்டிற்கு பாதிப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வீட்டை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஸ்டீல் கம்பிகள், தூண்கள் அடித்தளத்தை ஒரே பலமான கட்டமைப்பாக இணைத்திருந்ததால், வெள்ளம் வீட்டை அழுத்தியபோதும், அந்த சக்தி உறிஞ்சப்பட்டு, நிலத்திற்குள் கடத்தப்பட்டுவிட்டது.

இதுமட்டுமின்றி, வெள்ளத்தின் பிரதான நீரோட்டத்தில் இருந்து சற்று விலகி, மேடான பகுதியில் இந்த வீட்டின் அமைவிடம் இருந்ததால், அதிவேக தாக்குதலில் இருந்து வீடு தப்பியதாகவும், வீட்டின் அருகே குவிந்த சேறு நீரோட்டத்தின் திசையை மாற்றிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.