உலகம்

கடலென்ன மயான பூமியா?: ரஷ்ய கடற்கரையில் செத்துமிதக்கும் கடல்வாழ் உயிரினங்கள்.!

webteam

ரஷ்யாவின் தூரக்கிழக்கில் உள்ள தீபகற்பம் கம்சட்கா. அதுவொரு பிரபலமான சுற்றுலாதளம். இங்குள்ள கடற்கரை முழுவதும் பெருங்கூட்டமாக கடல்வாழ் உயிரினங்கள் செத்துமிதக்கும் காட்சிகளின் வீடியோ சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் நீரில் பெட்ரோலியத் தயாரிப்புகளின் அளவு அதிகரித்துவருவதுதான் அதற்கான காரணம் என அறியப்பட்டுள்ளது.

இந்த பிரபலமான சுற்றுலாதலமான கலக்டிர் கடற்கரையில் சில அறிகுறிகள் மூலம் ஏதோ தவறு நடந்திருப்பதாக மக்கள் உணரத் தொடங்கினர். கடலுக்குச் சென்ற வந்ததும் கடல்சறுக்கு விளையாடிய வீரர்களுக்கு கண்களில் பிரச்னை ஏற்பட்டதாக சமூக வலைதளத்தில் எழுதினார் யேக்டெரினை டைபா என்ற கடல் சறுக்கு விளையாட்டு நிர்வாகி.

மேலும், நீச்சல் வீரர்களுக்கு பார்வையும் மங்கத் தொடங்கியது . காய்ச்சல், தொண்டையில் வறட்சி என பல குறைபாடுகள் உருவானதாகவும் அவர் தெரிவித்தார். இப்படி பலரும் கடலில் விளையாடியதால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்னைகள் பற்றிய அனுபவங்களைப் பகிரத் தொடங்கினர்.

சில நாட்களுக்குப் பிறகு கடற்கரையில் ஆக்டோபஸ், நண்டுகள், நட்சத்திர மீன்கள், கடற்பாசிகள் ஆகிய கடல்வாழ் உயிரினங்கள் செத்துமிதக்கத் தொடங்கின. இந்த சூழ்நிலையை கிரீன்பீஸ், சுற்றுச்சூழல் பேரிடர் என வர்ணித்துள்ளது. இந்த கடற்பகுதியில் வழக்கத்தைவிட பெட்ரோலியத் தயாரிப்புகளின் கலப்பு 3.6 சதவீத அளவுக்கும். ஃபினால் வேதிப்பொருளின் கலப்பு வழக்கத்தைவிட 2.5 சதவீத அளவுக்கும் அதிகரித்துள்ளது.

கடற்கரையில் செத்து மிதக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சக்திமிக்க புயலால் சாகவில்லை. சுற்றுச்சூழல் சீர்கேட்டால்தான் பாதிக்கப்பட்டுள்ளன என்று குற்றம்சாட்டுகிறார் சுற்றுச்சூழல் அதிகாரி அலெக்சி குமர்கோவ்.