உலகம்

பதவி விலகியவர்களுக்கு புதிய அமைச்சரவையில் பதவி - ரிஷி சுனக்கின் திட்டமும் சவாலும் என்ன?

Abinaya

இங்கிலாந்து பிரதமராகப் பதவியேற்றுள்ள ரிஷி சுனக் தனது அமைச்சரவையில் முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக கடந்த ஆறு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியான சுயெல்லா பிரேவர்மேன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரை தற்போது மீண்டும் புதிய அமைச்சரவையில் சேர்த்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றதிலிருந்து இந்தியத் தலைவர்கள் உட்பட உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா பரவல், பணவீக்கம், வரி உயர்வால் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக சொந்தக்கட்சி எம்.பி-க்கள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் பதவிவிலகியதும், இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக்குக்கும், லிஸ் டிரஸ்ஸுக்கும் கடுமையான போட்டி நிலவ, இறுதியில் லிஸ் ட்ரஸ் வெற்றி பெற்றார். தவறான பொருளாதார நடவடிக்கைகளால் பிரிட்டன் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை எனக் கூறி லிஸ் ட்ரஸும் பதவி விலகினார்.

போரிஸ் ஜான்சன் தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த அனுபவம் ரிஷி சுனக்கிற்கு உண்டு; கொரோனாவை திறமையாக கையாண்டார் என்ற பெயரும் ரிஷிக்கு உண்டு. மேலும் புதிதாக லிஸ் ட்ரஸ் அறிவித்த பொருளாதார பட்ஜெட்டில் பிரச்னை இருப்பதை சுட்டிக்காட்டியவரும் ரிஷி தான். எனவே பிரிட்டனில் தற்போது நிலவும் பவுண்ட் வீழ்ச்சி, விலையேற்றம், உணவுத்தட்டுப்பாடு உள்ளிட்ட பொருளாதார சிக்கல்கள் எல்லாவற்றுக்கும் முக்கியக் காரணம் என்பதால், பொருளாதாரத்தில் அனுபவமிக்க ரிஷி சுனக் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்ய போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு வலுத்து இருக்கிறது.

ரிஷியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர்கள் போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.