IRON DOME
IRON DOME pt web
உலகம்

இஸ்ரேலின் பாதுகாப்பு அரணாக திகழ்ந்த 'IRON DOME' ஹாமாஸ் தாக்குதலில் வீழ்ந்தது எவ்வாறு?

PT WEB

காசாவுக்கு மிக அருகில் உள்ள பகுதியில் இருந்து திரும்பிய தமிழரின் கருத்துதான் இவை, "நான் 5 வருடமாக அங்கிருக்கிறேன். வருடாவருடம் இது போன்ற தாக்குதல்கள் நடக்கும். IRON DOME தடுத்துவிடும். ஆனால் இம்முறை இஸ்ரேலே பயந்துவிட்டது” என்றார். ஆனால், ஹமாஸின் தொடர்ச்சியான தாக்குதலை எப்படி இஸ்ரேலின் இரும்பு கோட்டையாக கருதப்படும் IRON DOME தடுக்காமல் விட்டது என்பது அவருக்கு புரியவில்லை என்பதே அவரின் பேச்சில் உள்ள அச்சம் கூறுகிறது.

IRON DOME - இரும்பு மாடம்

உலகில் மற்ற எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு திறன்மிக்க ஆயுதங்கள், தடுப்பு அமைப்புகளை இஸ்ரேல் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. தாக்குதல்களை முன்கூட்டியே அறிய இஸ்ரேல் அமைத்த புலனாய்வு அமைப்பு மொசாத். அதேபோல், தங்கள் நாடுகளை ஏவுகணைகளில் இருந்து பாதுக்காக்க கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு அமைப்புதான் IRON DOME. அதாவது இரும்பு மாடம். இதனை தாண்டி ஏவுகணை வராது. இப்படிப்பட்ட இரண்டு பாதுகாப்பு அம்சங்களையும் தாண்டித்தான் ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேல் பாதுகாப்பு அம்சங்கள் மீதான பெரிய நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்துள்ளது இந்த தாக்குதல்.

ஹமாஸிடம் எங்குதோற்றது IRON DOME

IRON DOME என்பது எதிரிநாடுகளில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிப்பு எல்லை பகுதிகளிலேயே அதனை அழிப்பது அல்லது திசை மாற்றி விடும் ஒரு அமைப்பாகும். இதிலும் சிறிய ஏவுகணைகள் இருக்கும். இது துல்லியமாக எதிரி நாடுகளின் ஏவகணைகளை அழிக்கும் திறன் கொண்டது. உலகின் பல நாடுகளில் இது போன்ற அமைப்பு இருந்தாலும், இஸ்ரேலின் IRON DOME என்பது லேசர் மற்றும் ரேடாரை ஒன்றாக இணைத்த அதிதொழில்நுட்பம் கொண்ட அமைப்பாக உள்ளது. 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரேலில் எல்லைப் பகுதியில் குறிப்பாக காசா மற்றும் லெபனான் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. 4 கிலோ மீட்டர் முதல் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு வரும் ராக்கெட் ஏவுகணையை முன்கூட்டியே கண்டறிந்து அதன் திட்டத்தை முறியடிக்கும்.

கடந்த 15 ஆண்டுகளாகவே இஸ்ரேலில் மீது வீசப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகளை தங்கள் நாடுகள் மீது விழ விடாமல் தடுத்து பாதுகாப்பு அம்சத்தில் தனக்கென தனி இடத்தை உலகளவில் பிடித்திருந்தது இந்த IRON DOME. ஆனால், ஹமாஸ் படையினர் தாக்குதலை இதன் அதிதொழில்நுட்பத்தினாலும் சமாளிக்க முடியவில்லை. அதற்கு காரணமாக கூறப்படுவது, ஒரே நேரத்தில் அதிகளவு ஏவுகணைகள் வந்ததுதான் என்கின்றனர் வல்லுநர்கள்.

20 நிமிடத்தில் 5000 மேற்பட்ட ஏவுகணைகளை வீசப்பட்டதால் IRON DOME முழுமையாக செயல்படவில்லை. இருப்பினும் அதில் பல்வேறு ஏவுகணை இதன் பாதுகாப்பு அம்சம்தான் அழித்துள்ளது. இல்லை என்றால் இஸ்ரேலில் உயிரிழப்பும், சேதமும் பன்மடங்கு உயர்ந்திருக்கும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளளது. இதுபோன்ற தாக்குதல்களையும் சமாளிக்க இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. தற்போது 10 முதல் 15 IRON DOME மட்டுமே உள்ளது. அதனை 10 மடங்கு உயர்த்தினால் அதிகப்படியான ஏவுகணைகளை சமாளிக்க முடியும் என்பதால் அதற்கான பணியில் களமிறங்கியுள்ளது இஸ்ரேல் ராணுவம்.