ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள சூழலில், மத்திய கிழக்கில் நொடிக்குநொடி பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில்தான் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், அவர்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்றும் அதனால், 10 நாட்களுக்கு ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் அறிவித்தார். அதேவேளையில் அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்தலாம் எனவும் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, தெஹ்ரானை இலக்காகக் கொண்ட இராணுவ நடவடிக்கையிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் வளைகுடா நாடுகளை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் தெஹ்ரான் டைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் "நரகத்திற்கு வரவேற்கிறோம்" என்ற தலைப்பின் கீழ் தரைவழி தாக்குதல் நடத்தினால் வெளிநாட்டுப் படைகள் "சவப்பெட்டிகளில் மட்டுமே வெளியேறும்" என்று செய்தி வெளியிட்டுள்ளது .
தெஹ்ரான் டைம்ஸ் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்ட இந்த செய்தி, மத்திய கிழக்குக்குக் கூடுதல் படைகளை அனுப்புவது குறித்து வாஷிங்டன் பரிசீலித்து வரும் நிலையில், பதற்றம் அதிகரித்து வருகிறது என்பதைக் காட்டுகிறது.
தெஹ்ரான் டைம்ஸின் முதல் பக்கத்தின் இருக்கும் ஒளிப்படம் கனரக ஆயுதங்களுடன் கூடிய வீரர்கள் ஒரு இராணுவ விமானத்தை நோக்கி அணிவகுத்துச் செல்லும் படம் இடம்பெற்றிருக்கிறது . அந்தக் காட்சியும், அழுத்தமான தலைப்பும், எதிர்ப்பையும் தயார்நிலையையும் பற்றிய ஒரு தெளிவான செய்தியை உணர்த்துகிறது ; தரைப்படைகளை உள்ளடக்கிய எந்தவொரு பதற்ற அதிகரிப்பும் கடுமையான பதிலடியைச் சந்திக்கும் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது .
தரைவழிப் படையெடுப்பு தொடங்கினால் அது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று ஈரான் அமெரிக்காவைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இப்போது, தெஹ்ரான் டைம்ஸ், அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.