உலகம்

“புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்”-கோத்தபய ராஜபக்ச

webteam

புதிய பயணத்தில் அனைவரும் சேர்ந்து பயணிப்போம் என்று அதிபர் தேர்தலில் முன்னிலையிலுள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச களம் கண்டுள்ளார். அதேபோல இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று இரவு முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபய ராஜபக்ச இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றனர். 

இந்நிலையில் அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற தேவையான 50 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளை கோத்தபய ராஜபக்ச பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தனது தோல்வியை ஒப்புக்கொண்டு, கோத்தபய ராஜபக்சவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல அதிபர் தேர்தலில் முன்னிலையிலுள்ள கோத்தபய ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இலங்கை அதிபராக நான் தொடங்கவுள்ள புதிய பயணத்தில் இலங்கை மக்கள் அனைவரும் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும். நாம் தேர்தலுக்கு எவ்வாறு அமைதியாக பரப்புரை செய்தோமோ அதேபோல அமைதியாகவும் மரியாதையுடனும் ஆட்சியில் பயணிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.