உலகம்

“தென் கொரியாவில் ஆயுதங்களை குவித்து பதற்றத்தை அமெரிக்கா உருவாக்குகிறது” - வடகொரிய அதிபர்

கலிலுல்லா

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவ அமெரிக்காவே காரணம் என வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் குற்றம்சாட்டிள்ளார்.

ஆளும் தொழிலாளர் கட்சியின் 76 வது ஆண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிம் ஜாங் உன் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ''வடகொரியா மீது விரோதம் இல்லை என அமெரிக்கா கூறுகிறது, ஆனால் அது உண்மையில்லை. எப்போதாவது அதை நிரூபித்திருக்கிறதா?. தென் கொரியாவில் ஆயுதங்களை குவித்து தேவையற்ற பதற்றத்தை அமெரிக்கா உருவாக்குகிறது. தற்காப்புக்காகவே ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறோம், போருக்காக அல்ல. கொரிய மக்களை ஒருவருக்கொருவர் எதிர்த்து நிற்கும் மற்றொரு போர் இருக்கக்கூடாது.

தென்கொரியா எங்கள் இராணுவப் படைகள் எதிர்த்துப் போராட வேண்டியதில்லை என்று நான் மீண்டும் சொல்கிறேன். தென்கொரியாவை எதிர்க்க நாங்கள் எங்கள் பாதுகாப்பு பலத்தை அதிகரிக்கவில்லை. தோழர்கள் ஒருவருக்கொருவர் எதிராக சக்தியைப் பயன்படுத்தும் கொடூரமான வரலாற்றை நாம் மீண்டும் செய்யக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.