மிகவும் பிரபலமான இரு அரசியல் தலைவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம்தான் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. அப்படி உலகத்தைக் கலக்கும் அந்த ஜோடி தலைவர்கள் யார்.. எதற்காக அவர்கள் வைரலாகிறார்கள் என்பது குறித்து இங்கு பார்ப்போம்...
ஒரு நாட்டின் தலைவர்கள், இன்னொரு நாட்டின் தலைவர்களைப் பொதுவான நிகழ்வுகளில் சந்திப்பது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “தாம் இந்தியாவிலிருந்து உங்களுக்கு பரிசு ஒன்று வாங்கி வந்திருக்கிறேன்” என்று கூறி, மெலோனிக்கு மெலோடி சாக்லெட் கொடுத்தார். இது, வைரலாகியது. இந்த நிலையில், 52-ஆவது ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், பல நாட்டுத் தலைவர்களும் குழு புகைப்படம் எடுக்க ஒன்றாக அணிவகுத்தனர். அப்போது மெலோனியும், பிரதமர் மோடியும் ஒருவரை ஒருவர் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது அங்கே பதிவான வீடியோவில் பிரதமர் மோடி, “சமூக வலைத்தளத்தில் நாம் இருவரும் அதிகம் பேசப்படுகிறோம்” என்பது போன்ற கருத்தை அவர் கூற, அதனைக் கேட்ட இத்தாலி பிரதமர், "ஆமாம், நாம்தான் இன்ஸ்டாகிராமில் மிகப் பிரபலமான ஜோடி" என்று கூறி சிரிப்பது பதிவாகியிருக்கிறது. இந்த வீடியோதான், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இவ்விரு தலைவர்களின் நட்பைப் குறிக்கப் பயன்படும் ’மெலோடி’(#MelodI)என்ற ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்டாகியுள்ளது. இத்தாலி பிரதமர் மெலோனி (Meloni) - பிரதமர் மோடியின் (Modi) பெயர்களை ஒன்றிணைத்தால் மெலோடி (MelodI)என்று வரும். இதுகுறித்து கடந்த 2023ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைகள் பகிரப்பட்ட நிலையில், அது பிரபலமடைந்தது. அதற்கு உதாரணமாய், கடந்த 2024ஆம் ஆண்டு மெலோனி, பிரதமர் மோடியுடன் ஒரு செல்பி எடுத்து... அதனை, ‘இனிய நண்பர்களே.. நாங்கள் மெலோடி’ எனப் பதிவிட்டிருந்தார். அதுமுதல் இரு தலைவர்களும் பகிர்ந்துகொள்ளும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் வரவேற்பையும் பெற்று வருகிறது.