செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்திய பனிப்பாறை சரிவு மற்றும் பெருவெள்ளம் குறித்து சில நாட்களுக்கு முன்பே ஆபத்துக்கான அறிகுறிகள் தென்பட்டதாக சர்வதேச விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியான Hi RISK ஆய்வறிக்கையில், செயற்கைக்கோள் படங்களில் ’பேரழிவுக்கு முந்தைய அறிகுறிகள்’ பதிவாகியிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பனிப்பாறையின் மேற்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களும் இதில் அடங்கும். அது மட்டுமல்லாமல், பனிப்பாறைக்குள் நீர் ஓட்டத்தின் வேகம் அதிகரித்ததற்கான தடயங்களும் காணப்பட்டன. மேலும், பனிப்பாறைக்கு அடியில் மாற்றங்கள் ஏற்பட்டதுடன், அதைச் சுற்றியுள்ள பாறைப் பகுதியும் வலுவிழந்து இருந்ததற்கான அறிகுறிகள் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஆகஸ்ட் 24-ஆம் தேதி செயற்கைக்கோள் படங்களில் பனிப்பாறை உருகி வெளியேறிய நீர், பழுப்பு நிறமாக மாறியதும், அருகிலுள்ள பாறைச் சரிவில் விரிசல் ஏற்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.
முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் தாழ்வான பகுதிகளில் 10 நிமிடங்களுக்கும் அதிகமான அவகாசம் கிடைத்திருக்கக்கூடும் என்றும், ஏராளமானோரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் முன்னெச்சரிக்கை அமைப்புகள் மிகவும் பலவீனமாக இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இமயமலையின் பரந்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனிப்பாறைகளை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கூடிய செயற்கைக்கோள் கண்காணிப்பு அவசியம் என்பதையும் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த பேரழிவில் திரிசூலி ஆற்றங்கரையோர குடியிருப்புகள் மற்றும் பல நீர்மின் நிலையங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இன்னமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பலி எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ள நிலையில், சுமார் 4,500 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.