Iran and the United States has ended Peace Treaty
உலகம்

முடிவுக்கு வந்தது ஈரான்-அமெரிக்கா போர்.. இரு நாடுகளும் அறிவிப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் உலகம்!

ஈரான் - அமெரிக்கா போர் முடிவடைந்து விட்டதாகவும், இரு தரப்பும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ததாகவும் அறிவித்துள்ளன.

Praveen Joshva L

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அதிஉயர் தலைவர் காமேனி உயிரிழந்தது உலகை அதிர்ச்சியடையச் செய்தது. பின்னர் ஈரான் வளைகுடா தளங்கள், ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தது. தொடர்ந்த தாக்குதல்களுக்குப் பின், பாகிஸ்தான், கத்தார் நடுநிலை முயற்சியால் இரு தரப்பும் ஒப்பந்தத்தில் இணங்கின. ஹோர்முஸ் சுங்கமின்றி திறக்க, அமெரிக்க படைகள் ஈரான் துறைமுகங்களை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரானின் அதிஉயர் தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அதோடு நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய அரசியல், ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்டனர்.

எனினும் இந்த இழப்பில் இருந்து மீண்ட ஈரான் அமெரிக்க ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீது கடுமையாக தாக்குதலை நடத்தியது. அதோடு முக்கிய கச்சா எண்ணெய் வர்த்தக தடமான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியது.

இந்த சூழலில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த போர் மீண்டும் தொடங்கியது. இரு தரப்பும் மாறி மாறி தாக்கிக்கொண்ட சூழலில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது.

தொடர்ந்து போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. இதனைக் குறிப்பிட்டு ஈரான் போர் முடிவடைவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், போர் முடிவடைந்ததாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன. அமெரிக்காவுடனான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதை ஈரானின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி அரசுத் தொலைக்காட்சியில் பேசியபோது உறுதிப்படுத்தினார். அதேவேளையில், டிரம்ப் சமூக ஊடகங்களில் எண்ணெய் தடையின்றி பாயட்டும் என்று பதிவிட்டார்.

மேலும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை சுங்கக்கட்டணம் இன்றி திறக்கப்படும் என்று ஈரானும், ஈரானின் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்பபெறப்படும் என்றும் அமெரிக்காவின் அறிவித்துள்ளன. இந்த அமைதி ஒப்பந்தம் வரும் ஜூன் 19-ம் தேதி ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.