உலகம்

கீவ் நகரில் குண்டுவீச்சு ஒருபுறம் பாசப் போராட்டம் மறுபுறம்

கலிலுல்லா

உக்ரைனில் ரஷ்ய படையினரின் தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குடும்பத்தை அதிபர் செலன்ஸ்கி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உக்ரைனுக்கு சொந்தமான கிரைமியா தீபகற்பத்தை ரஷ்யா தன்னோடு இணைத்துக் கொண்டதை பிடிக்காமல் அங்கு வசித்த விளாசென்கோ என்பவரது குடும்பம் கீவ் பகுதிக்கு புலம் பெயர்ந்தது. இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்ய படைகள் கீவ் நகரில் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அப்போது விளாசென்கோ குடும்பத்தினர் சென்ற காரும் ரஷ்ய வீரர்களின் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டது. காருக்குள் இருந்த விளாசென்கோவின் 16 வயது மகள், தனது 8 வயது தம்பியின் உயிரை காப்பாற்ற கட்டியணைத்து, துப்பாக்கி குண்டுகளை தனது முதுகில் வாங்கிக் கொண்டார்.

சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய அக்காவை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பி காரில் இருந்து வெளியே வந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் உரக்கமாக உதவி கேட்டுள்ளான். இந்த தாக்குதலில் குழந்தைகளின் தாய் டெட்டியானாவும் படுகாயமடைந்த நிலையில், இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சைக்குப் பின் இருவரது உயிரையும் மருத்துவர்கள் காப்பாற்றினர். இந்த தகவலை அறிந்த அதிபர் செலன்ஸ்கி நேரடியாக மருத்துவமனைக்கு சென்று பூங்கொத்து கொடுத்து விளாசென்கோ குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.