உலகம்

சீற்றம் குறையாமல் வெடிக்கும் 'லா பால்மா' எரிமலை

கலிலுல்லா

ஸ்பெயினில் கேனரி தீவிலுள்ள லா பால்மா எரிமலையிலிருந்து சீற்றம் குறையாமல் வெளியேறும் அடர்த்தியான லாவா குழம்பால் குடியிருப்புகள் பெருமளவு சேதமடைந்துள்ளது.

எரிமலை வாயிலிருந்து ஆறுபோல பாய்ந்தோடும் அடர் லாவா குழம்பில் சிக்கி பல நூறு வீடுகள் பற்றி எரிகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 19ஆம் தேதி எரிமலை வெடிக்கத் தொடங்கியதில் இருந்து, இதுவரை ஆயிரம் வீடுகள் லாவா குழம்பில் சிக்கி சாம்பலாகிவிட்டன.

குடியிருப்புகளை தாண்டி, விளைநிலங்களில் வழிந்தோடிய லாவா குழம்பால், பயிர்கள் எல்லாம் எரிந்து கருகிவிட்டன. அந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் இன்று அதிகாலை முதல் லா பால்மா எரிமலையிலிருந்து அடர் லாவா குழம்பு வெளியேறுகிறது. எரிமலை சீற்றம் தணிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என ஆய்வாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.