உலகம்

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவும் ஆபத்தான புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

JustinDurai

வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் ஆனது வெவ்வேறு நாடுகளில் உருமாற்றம் அடைந்து பரவி வருவது கண்டறியப்பட்டு வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த வகைகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில்  வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக்கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற இணைய வழி மாநாட்டில் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வியட்நாமில், 7 விதமான கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வியட்நாம் சுகாதாரத்துறை அமைச்சர் நுயேன் தன் லாங், வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ஆனது, இந்திய மற்றும் பிரிட்டன் வகை கொரோனா வைரஸின் ஹைபிரிட் வகை என கூறினார். மேலும் இதன் மரபணு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது அது பிற கொரோனா வைரஸின் வகைகளைக் காட்டிலும் இதனுடைய பரவும் வேகம் மிக அதிகமாக இருப்பதாக கூறினார். நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள், புதிய வகை திரிபுவால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் மரபணு தரவுகளை விரைவில் அரசு வெளியிடும் என்று அமைச்சர் நுயேன் தன் லாங் தெரிவித்துள்ளார்.