உலகம்

செய்யாத குற்றத்திற்கு 31 ஆண்டுகள் சிறையில் கழித்த யுஎஸ் சகோதரர்கள்: ரூ.550 கோடி இழப்பீடு

EllusamyKarthik

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்கு 31 ஆண்டுகளை சிறையில் செலவிட்ட சகோதரர்கள் இருவருக்கு இழப்பு தொகையாக ரூ.550 கோடியை அறிவித்துள்ளது நீதிமன்றம். கடந்த 1983இல் 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்ததாக மெக்கோலம் மற்றும் லியோன் பிரவுன் மரண தண்டனை பெற்றுள்ளனர். தொடர்ந்து தங்கள் மீது தவறு இல்லை என நீதிமன்றத்தை நாடிய அவர்கள் DNA பரிசோதனை மூலம் நிரபராதி என உறுதியானது. தொடர்ந்து 2014இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

பின்னர் 2015இல் செய்யாத குற்றத்திற்காக தண்டனை பெற்று வாழ்க்கையை பறிகொடுத்ததாக நீதிமன்றத்தில் இருவரும் முறையிட்டனர். அதனை விசாரித்த நீதிபதிகள் இருவருக்கும் 550 கோடி ரூபாயை இழப்பு தொகையாக அறிவித்துள்ளது. தலா ஒருவருக்கு ஆண்டுக்கு 7 கோடி வீதம் இந்த இழப்பு தொகை கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

1983இல் மெக்கோலம் மற்றும் லியோன் பிரவுன் இந்த வழக்கில் அவர்கள் இருவரும் சிக்கிய போது 19 மற்றும் 15 வயது டீன் ஏஜர்களாக இருந்துள்ளனர். 

“எங்களை போன்றே செய்யாத குற்றத்திற்காக பலரும் சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்களும் எங்களை போலவே விடுதலை பெற வேண்டும் என விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்   மெக்கோலம்.