உலகம்

நடுவானில் பிரசவ வலி: பணிப்பெண் உதவியால் பிறந்த குழந்தைக்கு புதுவிதமான பெயரிட்ட தாய்

ச. முத்துகிருஷ்ணன்

அமெரிக்காவில் விமானத்தில் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது கர்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டதை அடுத்து, விமான ஊழியர்கள் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றெடுக்க உதவினர்.

அமெரிக்காவில் கொலராடோவிலிருந்து புளோரிடா செல்லும் ஃப்ரண்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை பென்சகோலா விமான நிலையத்திற்கு திருப்ப விமான கேப்டன் நை முடிவெடுத்தார்.

இந்நிலையில் சமயோசிதமாக செயல்பட்ட விமானப் பணிப்பெண் டயானா ஜிரால்டோ, குழந்தை பெற்றெடுக்க கர்ப்பிணிக்கு உதவினார். விமானம் தரையிறங்கும் முன்பே பெண் குழந்தையை பெற்றெடுத்தார் அந்தப் பெண். விமானம் தரையிறங்கியதும் விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து பூரண ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாக தெரிவித்தனர்.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் தாய், பிறந்த இடத்தை குறிக்கும் வகையில், தனது குழந்தைக்கு “ஸ்கை” (SKY) எனப் பெயரிட்டார். Frontier Airlines நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தையும்,  கர்ப்பிணிப் பெண்ணுக்கு  உதவிய விமான ஊழியர்கள் புகைப்படங்களையும் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.