உலகம்

ரூம்மேட் நண்பர்களை கத்தியால் குத்திவிட்டு ஹாயாக ஷாப்பிங் சென்ற தோழி!

Sinekadhara

அமெரிக்காவில் அறை பிரச்னை காரணமாக தனது அறை தோழர்களை பலமுறை குத்திவிட்டு ஷாப்பிங் புறப்பட்டு சென்றுள்ளார் ஒரு விசித்திர பெண்.

இந்த சம்பவம் ஃப்ளோரிடாவில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மரியன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், தானும் தனது நண்பரும் 30 வயதான கிறிஸ்டினா ஆடம் என்ற பெண்ணால் பலமுறை குத்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அதுவும் தங்களுடன் அறையில் தங்குவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண் இப்படி நடந்துகொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குற்றம்புரிந்த கிறிஸ்டினா அவர்கள் வீட்டிற்கு அருகே காரில் சென்றதை கண்டுபிடித்துள்ளனர். பின்னார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனது நண்பர்கள் இருவரும் இறந்துவிட்டதாகக் கருதி முதலில் தான் எதுவும் செய்யவில்லை என மறுத்திருக்கிறார். பின்னர் இருவரும் உயிருடன் இருப்பதை அறிந்தபிறகே தான் கத்தியால் குத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இருவரையும் கத்தியால் பலமுறை குத்தியபிறகு கிறிஸ்டினா தான் செய்த குற்றத்தை மறைக்க வேறு ஆடைகளை மாற்றிக்கொண்டு ஷாப்பிங் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷாப்பிங் சென்றுவிட்டு திரும்பிய போதுதான் கிறிஸ்டினாவை போலீசார் பிடித்துள்ளனர். மேலும், ஒரு மாதத்திற்கு முன்பு தன்னை வீட்டை காலி செய்யுமாறு கூறியபோதே தனது அறை நண்பர்களை கொலைசெய்ய கிறிஸ்டினா திட்டமிட்டதாகவும் கூறியுள்ளார். இதுதவிர, தனக்கு மனநலம் சரியில்லை எனவும், தன்னை ஒரு சமூக விரோதியாக கருதுவதாகவும், தான் dissociative identity பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார் கிறிஸ்டினா.

கிறிஸ்டினாவால் குத்தப்பட்ட இருவரும் உயிர் பிழைத்திருந்தாலும் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வன்முறை அதிர்ச்சையை அளிப்பதாக கூறியுள்ளார் அதிகாரி ஒருவர்.