வடகொரியாவின் ஏவுகணைச் சோதனையால் கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 9 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐ.நா. சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும், வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை நீடித்து வருகிறது. இந்நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை, பாதுகாப்பு அமைப்பானது இடைமறித்து அழித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.