ஈரான் மீது தொடரும் வான்வழிப் போரால் அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணை கையிருப்பு 65% வரை குறைந்துள்ளது. 2,330 இருந்த கையிருப்பு 759–827 ஆக சரிந்த நிலையில், ஆண்டுக்கு 183 ஏவுகணைகள் மட்டுமே தயாரிக்கப்படும் மந்த உற்பத்தி வேகம், கையிருப்பை மீண்டும் நிரப்புவதில் அமெரிக்காவுக்கு கடுமையான சவாலாக மாறியுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
ஈரானுக்கு எதிராகத் தொடர்ந்து அமெரிக்கா தீவிரமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் தக்க பதிலடிக் கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் முக்கிய வான் பாதுகாப்பு ஆயுதமான ‘பேட்ரியாட்’ இடைமறிப்பு (Patriot interceptor) ஏவுகணைகளின் கையிருப்பு கடுமையாகக் குறைந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
போருக்கு முன்பு அமெரிக்க ராணுவத்திடம் சுமார் 2,330 பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் இருந்ததாக சர்வதேச உத்திசார் ஆய்வுகளுக்கான மையமான (CSIS) கூறியிருந்தது. ஆனால், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழிப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளால், இந்த கையிருப்பு தற்போது சுமார் 759 முதல் 827 ஏவுகணைகளாக குறைந்துள்ளதாக CSIS மதிப்பிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்காவின் அதிநவீன பேட்ரியாட் ஏவுகணைகளில் சுமார் 65 சதவீதம் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அல்லது இழக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக, புதிய ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் வேகம் குறைவாக இருப்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. CSIS தகவலின்படி, அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 183 பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை மட்டுமே தயாரிக்கிறது. மேலும், ஒப்பந்தம் கையெழுத்தானது முதல் ஏவுகணைகள் ராணுவத்திடம் வந்து சேருவதற்கு சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆகிறது.
இதனால், போரில் வேகமாகக் குறைந்து வரும் கையிருப்பை உடனடியாக நிரப்புவது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது.
பேட்ரியாட் மட்டுமின்றி, அமெரிக்காவின் மற்றொரு முக்கிய வான் பாதுகாப்பு அமைப்பான THAAD-ன் கையிருப்பும் கணிசமாகக் குறைந்துள்ளது. நீண்ட தூரம் மற்றும் அதிக உயரத்தில் வரும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்ட THAAD, பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 8 வரையிலான மோதல்களில் கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்நிறுத்தத்துக்குப் பிறகு THAAD கையிருப்பில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றாலும், இந்த ஏவுகணைகளை மீண்டும் உற்பத்தி செய்து கையிருப்பை நிரப்புவது மிகவும் கடினமான பணியாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஏவுகணை கையிருப்பு வேகமாகக் குறைந்து வருவதால், எதிரிகளின் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் போது அமெரிக்கப் படைகள் தங்களது தடுப்பு ஏவுகணைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பற்றாக்குறை உக்ரைன் உள்ளிட்ட கூட்டணி நாடுகளுக்கான அமெரிக்க ராணுவ உதவிகளையும், எதிர்காலத்தில் சீனாவை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தயார்நிலையையும் பாதிக்கக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. மேலும் கையிருப்பை நிரப்புவதற்காக அமெரிக்க பாதுகாப்புத்துறை கூடுதல் நிதியைக் கோரியுள்ளது.