அமெரிக்க எரிசக்தித் துறை செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் சவுதி இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் கையெழுத்திட்ட இந்த அணுசக்தி ஒப்பந்தம், அமெரிக்க அணு தொழில்நுட்ப ஏற்றுமதியை விரிவுபடுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என கூறப்படுகிறது. ஆனால் யுரேனியம் செறிவூட்டல், பயன்படுத்திய எரிபொருள் மறுசுழற்சி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், சவுதி எதிர்கால அணு ஆயுத முயற்சிகளுக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
செய்தியாளர் ; M. மீரா
அமெரிக்கா-சவுதி அரேபியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் என்ன?
அமெரிக்கா - சவுதி அரேபியாவுடன் பல்லாயிரம் கோடி டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது எதிர்காலத்தில் யுரேனியத்தை செறிவூட்ட, சவுதி அரேபியாவை அனுமதிக்கக்கூடிய ஒரு முக்கிய அணுசக்தி ஒப்பந்தம் ஆகும் .
இதுகுறித்து வெளியான செய்தியில், அமெரிக்க எரிசக்தித் துறை, செயலாளர் கிறிஸ் ரைட் மற்றும் சவுதி அரேபியாவின் அமைச்சரான இளவரசர் அப்துல்அஜீஸ் பின் சல்மான் அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு உத்தரவாத ஒப்பந்தம் ஆகியவற்றில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நேரம் சர்ச்சைக்குரியதாகக் கருதப்படுகிறது. ஈரானின் உள்நாட்டு யுரேனியம் செறிவூட்டலைத் தடுக்கவும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஈரான் மீதான போர் என்று அமெரிக்கா கூறி வருகிறது. .
அணுசக்தி ஒப்பந்தத்தின் பின்னணி என்ன?
ஈரான் ஓர் அணு ஆயுதத்தைப் பெற்றால், தங்களுக்கும் அது தேவைப்படும் என்று சவுதி அரேபியா கடந்த காலத்தில் பல முறை கூறியுள்ளது. ஆனால், அணுசக்தி குறித்து பல முறை நடந்த பேச்சுவார்த்தைகளில், சவுதி அரேபியா விரும்பியதை அமெரிக்கா வழங்காவிட்டால், அணு தொழில்நுட்பத்திற்காக வேறு இடங்களைத் தேடும் என்று அமெரிக்கா அஞ்சியது. அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் அணு ஆயுதப் தரநிலைகளைக் கொண்ட சீனா அல்லது ரஷ்யாவுடன் கூட்டு சேரக்கூடும் என்று சவுதி அரேபியா நீண்ட காலமாக கூறி வருகிறது. இதனாலேயே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து அமெரிக்க எரிசக்தித் துறை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்ப ஏற்றுமதிகளை விரிவுபடுத்தும், அதிக ஊதியம் பெறும் அமெரிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் தேசியப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளது.
பொதுவாக, அமெரிக்கா பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தங்களில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளை மறுசுழற்சி செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதையே 'Gold Standard' பாதுகாப்பு விதிமுறை என்று அழைக்கிறார்கள்.
ஆனால், சவுதியுடனான இந்த ஒப்பந்தத்தில் அந்த விதிமுறைகள் இடம்பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சர்வதேச அணுசக்தி முகமை - IAEA மேற்கொள்ளும் திடீர் ஆய்வுகளுக்கான வழக்கமான கண்காணிப்பு விதிகளும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை என கூறப்படுகிறது. இதன்மூலம் ஐ.நா அணுசக்தி அமைப்பு சவுதியின் அணு உலைகளில் திடீர் சோதனைகளை மேற்கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக அமெரிக்காவும் சவுதியும் மட்டுமே பரஸ்பரம் கண்காணிப்பை மேற்கொள்ளும்.