donald trump, xi jinping x page
உலகம்

ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கிய சீனா.. அதிரடி நடவடிக்கை எடுத்த அமெரிக்கா!

ஈரானின் இறையாண்மையைக் காக்கும் வகையில் அந்த நாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் அத்தகைய ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதில் சீனாவின் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை என்ற தகவலும் வெளியானது.

Prakash J

ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ஆயுத பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஈரான் கொள்முதல் செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டி, சீனா மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க கருவூலம் தடை விதித்துள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டு வரும் அமெரிக்கா மற்றும் ஈரானின் நீயா.. நானா போட்டியால் உலகம் முழுவதும் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவை விலையேறி வருகின்றன. இந்த நிலையில், ஈரானுக்கு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை பாகங்களைக் கொள்முதல் செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ட்ரம்ப், ஜின்பிங்

மத்திய கிழக்குப் போரின்போது ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் இரண்டையும் ஒரேநேரத்தில் எதிர்கொண்டது. ஈரானிய வெடிமருந்துகள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க சொத்துகளை மட்டுமல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட குறைந்தது 11 நாடுகளின் இலக்குகளையும் தாக்கின. ஈரானிய இராணுவத்தின் முக்கிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அழிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதன் துணைப் பிரிவுகள் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கின. அப்படியெனில், அதன் நெருங்கிய நட்பு நாடான சீனா, ஈரானுக்கு உதவியதா எனக் கேள்விகள் எழுந்தன. காரணம், ஈரானின் இறையாண்மையைக் காக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் அத்தகைய ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதில் சீனாவின் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை என்ற தகவலும் வெளியானது. ஆனால், ஈரானின் ஆட்சியைத் தாங்கிப் பிடிக்க சீனா உதவுகிறது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியது.

இந்தச் சூழ்லில், ஷாஹெட் ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ஆயுத பாகங்கள் மற்றும் மூலப்பொருட்களை ஈரான் கொள்முதல் செய்ய உதவியதாகக் குற்றம்சாட்டி, சீனா மற்றும் ஹாங்காங்கைத் தளமாகக் கொண்ட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்க கருவூலம் தடை விதித்துள்ளது. சீனாவைத் தளமாகக் கொண்ட யுஷிதா ஷாங்காய் இன்டர்நேஷனல் டிரேட் கோ லிமிடெட் மற்றும் துபாயைத் தளமாகக் கொண்ட எலைட் எனர்ஜி FZCO ஆகியவையும் தடை செய்யப்பட்ட நிறுவனங்களில் அடங்கும். அதேபோல், ஈரான் நாட்டைச் சேர்ந்த பிஷ்காம் எலக்ட்ரானிக் சேஃப் கோ நிறுவனமும், சீனா நாட்டைச் சேர்ந்த ஹிடெக்ஸ் இன்சுலேஷன் நிங்போ கோ லிமிடெட் நிறுவனமும் தடை செய்யப்பட்டுள்ளன.

ட்ரம்ப் - ஜின்பிங்

இதுதவிர, இன்னும் சில நிறுவனங்களும் இதில் அடக்கம். ஈரானின் திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவிர, இந்த விவகாரத்தால் அதிபர்கள் சந்திப்பில் பின்னடைவு ஏற்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.