செய்தியாளர் - M. மீரா
ஈரானுடனான மோதலுக்கு மத்தியில், நீண்டகாலமாக மேற்கு ஆசியாவில் பணியாற்றி வரும் அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலுக்கு பதிலாக USS George Washington கப்பலை திருப்பி அனுப்ப அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.
USS Abraham Lincoln கடந்த நவம்பர் 21ஆம் தேதி சான்டியாகோவில் இருந்து புறப்பட்டது. டிசம்பர் 11ஆம் தேதி குவாமில் (Guam) கடைசி துறைமுக நிறுத்தத்தில் நின்ற பின்னர், தொடர்ந்து கடலில் பணியாற்றி வருகிறது. ஜனவரி 2026-இல் மத்திய கிழக்கை வந்தடைந்தது. ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் தீவிரமடைந்ததாலும் முதலில் திட்டமிடப்பட்டிருந்த பணிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டிருந்தது.
அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (CVN-72), ஈரானுடனான தொடர்ச்சியான போரில் அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் மற்றும் கடற்படை முற்றுகைகளுக்கு ஆதரவளித்து மத்திய கிழக்கில் தீவிரமாக நிலைநிறுத்தப்பட்டிருந்தது . இது 250 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக எந்தத் துறைமுகத்திலும் நிற்காமல் கடலில் இருந்து, போர் விமானங்களை ஏவி, ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் முற்றுகைகளை அமல்படுத்தியது.
தொடர்ந்து கடலிலேயே பணியாற்றியதால் ஆயிரக்கணக்கான மாலுமிகள் தங்கள் குடும்பங்களை விட்டு பல மாதங்கள் கூடுதலாக கடலில் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நீண்டகால பணியமர்த்தல், கொரோனா காலத்தில் USS Dwight D. Eisenhower படைத்திருந்த சாதனையையும் முறியடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லிங்கன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளுக்கு போதுமான குடிநீர், உணவு, குழாய் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக அமெரிக்க நாடளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கப்பலில் இருந்து சில மாலுமிகள் கடலில் குதித்ததாகக் கூறப்படும் தகவல்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கூடுதலாக இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. ஒரு மாலுமி கடலில் விழுந்த சம்பவத்தை அமெரிக்க கடற்படை உறுதி செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நீண்டகால பணியமர்த்தலால் மாலுமிகளின் மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், விமானம் தாங்கி கப்பல்கள் சொகுசு விடுதிகளைப் போல இருக்க வேண்டியதில்லை என்றாலும், வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், USS George Washington தலைமையிலான Carrier Strike Group மேற்கு ஆசியாவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவில் USS Robert Smalls மற்றும் USS Shupe உள்ளிட்ட போர்க்கப்பல்களும் இடம்பெற்றுள்ளன.
ஜார்ஜ் வாஷிங்டன் கப்பல் மேற்கு ஆசியாவில் பணியை ஏற்கும் நிலையில், நீண்டகாலமாக பணியில் இருந்த USS Abraham Lincoln கப்பல் ஓய்வு பெற்று தாயகத்துக்குத் திரும்பும் வாய்ப்பு உருவாகியுள்ளது.