அமெரிக்கா – ஈரான் போரால் உலகளவில் எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனால் உருவாகும் நிதி நெருக்கடி காரணமாக ஜூன் மாத இறுதிக்குள் கூடுதலாக நான்கரை கோடி மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) எச்சரித்துள்ளது. இந்த மோதலின் பொருளாதார தாக்கம் ஏற்கனவே பாதிப்பில் உள்ள ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பை மேலும் மோசமாக்கும் அபாயம் இருப்பதாகவும் இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களே, வளைகுடா நாடுகள் மற்றும் லெபனான் வரை பரவிய பிராந்திய மோதலுக்குக் காரணமாக அமைந்தன. இதன் விளைவாக ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல் வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்பட்டதால், பல சரக்குக் கப்பல்கள் மாற்று வழிகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலிகளில் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
இதன்காரணமாக, உலகளவில் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே பாதிப்புக்குள்ளான நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. இது குறித்து ஐநா நடத்திய ஆய்வில், அமெரிக்க - ஈரான் போரினால் ஏற்பட்ட விலை உயர்வு காரணமாக, சோமாலியாவில் 25 மக்களும், ஆப்கானிஸ்தானில், 23 லட்சம் மக்களும், இலங்கையில் 13 லட்சம் மக்களும் கூடுதலாக தங்களது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போராடி வருவதாக ஐநாவின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதேநிலை நீடித்தால், ஜூன் மாத இறுதிக்குள் கூடுதலாக, 4.5 கோடி மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும், இதன்மூலம், உலகம் முழுவதும் பட்டினி அபாயத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை 36 கோடிக்கும் மேல் செல்லக்கூடும் எனவும் உலக உணவுத் திட்டம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, சூடான், காசா, தெற்கு லெபனான், ஏமன் மற்றும் ஹைட்டி ஆகிய நாடுகளும் உணவு பாதுகாப்பு இல்லாத நாடுகளாக இருக்கின்றனர் எனவும் தெரிவித்திருக்கிறது.
இந்த அறிக்கை குறித்து கூறியுள்ள உலக உணவுத் திட்டத்தின் (WFP) தற்காலிக நிர்வாக இயக்குநர் கார்ல் ஸ்காவ், நாங்கள் அந்தக் கணிப்பில் உறுதியாக இருக்கிறோம் எனவும் மத்திய கிழக்கில் நெருக்கடி தணிந்தாலும் கூட, வரும் மாதங்களில் இந்த பாதிப்புகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு, இதனால் மத்திய கிழக்கு மோதல் என்பது வெறும் பிராந்திய அரசியல் அல்லது ராணுவ பிரச்சினையாக மட்டுமின்றி, உலகளாவிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடியாகவும் உருவெடுத்து வருவதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.