அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற போர் ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அது தொடர்பாக 14 அம்சத் திட்டங்கள் அடங்கிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அணு ஆயுதம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக தொடங்கப்பட்ட தாக்குதல், அடுத்து ஹார்முஸ் ஜலசந்தியின் பிரச்னையாகவும் உருமாறியது. இதற்கிடையே, பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஆனாலும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. இதனால் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு நாடுகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தின. இதனைக் குறிப்பிட்டு ஈரான் போர் முடிவடைவதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்த நிலையில், போர் முடிவடைந்ததாகவும், அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் இரு நாடுகளும் அறிவித்துள்ளன. மேலும், அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகளும் வெளியாகி உள்ளன. அதன்படி, போர் நிறுத்தம், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறத்தல் மற்றும் அணுசக்திப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குதல் ஆகியவற்றுக்கான ஒரு வரைவுக் கட்டமைப்புக்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளன.
மேலும், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்கக் கட்டுப்பாடுகள் நீக்கம், பேச்சுவார்த்தைகளின்போது புதிய அமெரிக்கத் தடைகள் இல்லாதது, ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு தற்காலிக விலக்குகள், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல், அமெரிக்காவையும் ஈரானையும் நீண்டகாலமாகப் பிரித்து வந்த பிரச்னைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த 60 நாள் அவகாசம், அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்ற ஈரானின் உறுதிப்பாடு, ஈரான் யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், ஈரானின் அணுசக்தி நிலையங்களின் விரிவாக்கத்திற்கு முடக்கம், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு குறித்த பேச்சுவார்த்தைகள், பிராந்திய பதற்றத் தணிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரம் மற்றும் நீக்கம் தொடர்பான விவாதங்கள். இறுதி விரிவான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை உள்ளிட்ட 14 முக்கிய அம்சங்கள் இறுதி செய்யப்பட இருக்கிறது.
ஜூன் 19 அன்று கையெழுத்திடப்படும் இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம், உடனடி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர மட்டுமே உதவும் எனவும், அதேநேரத்தில், மிகக் கடினமான பேச்சுவார்த்தைகள் இனிமேல்தான் வரவுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், இந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலான அமசங்கள் அமெரிக்காவுக்கே சாதகமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.