உலகம்

காபூல்: ஐ.எஸ். பயங்கரவாதிகளின் காரை ட்ரோன் மூலம் தகர்த்த அமெரிக்க படையினர்

JustinDurai
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படையினரை குறிவைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 26ஆம் தேதி காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள், ஆப்கன் மக்கள் என 180 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சூழலில், நேற்று காபூலில் கார் ஒன்றை அமெரிக்க படையினர், ட்ரோன் மூலம் தாக்கியதில் அது வெடித்துச்சிதறியது. காரில் வெடிபொருட்களை நிரப்பிக்கொண்டு விமான நிலையத்தை மீண்டும் தாக்க ஐ.எஸ் பயங்கரவாதிகள் முயற்சித்ததாலேயே அதனை தகர்த்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் கட்டடம் ஒன்று சேதமடைந்ததாகவும் அதில் குழந்தைகள் உட்பட பலர் இறந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.