gmaps
gmaps  file image
உலகம்

அப்பாவுக்காக காத்திருந்த குழந்தை.. கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்!

PT WEB

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகானத்தைச் சேர்ந்தவர் ஃப்லிப் பேக்சோன். இவர் தனது மனைவி அலிகா மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மூத்த மகள் பிறந்தநாள் விழாவை கொண்டாட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டுக்கு திரும்பியுள்ளார் பேக்சோன். நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்பிய அவர், கூகுள் மேப்பின் உதவியுடன் காரை ஓட்டி வந்துள்ளார்.

நல்ல மழையும் பெய்த நிலையில், ஹிக்கேரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, பழுதடைந்த பாலத்தில் இருந்து, 20 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த பாலம் 2013ம் ஆண்டே பழுதடைந்துவிட்ட நிலையில், இன்றுவரை அது சரிசெய்யப்படாததாக தெரிகிறது. இந்நிலையில், கூகுள் மேப்பை பார்த்து பாலத்தில் ஏறிய பேக்சோன் பரிதாபமாக பலியானார். பழுதடைந்த பாலத்தில் எந்த வித தடுப்போ, எச்சரிக்கை பலகையோ வைக்கப்படாததாலும், கூகுள் மேப் காட்டிய தவறான வழியாலும் தங்களது பேக்சோன் உயிர் பிரிந்ததாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

மூத்த மகளுக்கு தற்போது 9வது பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், அப்பாவுக்கு என்ன ஆயிற்று என்று இனறளவும் கேட்டு வருவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடைந்துபோன பாலத்தில் வழிகாட்டியதற்காக கூகுள் நிறுவனம் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், பாலம் பழுதானதால் கூகுள் மேப்பில் அப்டேட் செய்யுமாறு பெண் ஒருவர் கூகுள் நிறுவனத்திடன் முறையிட்ட நிலையில், “உங்களது கருத்து சரிபார்க்கப்படும். இதனை எங்களது கவனத்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி” என்றும் பதில் கிடைத்துள்ளது.

இருந்தபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்று கூறி குடும்பத்தார் வழக்கு தொடர்ந்த நிலையில், இது குறித்து பரிசீலித்து வருவதாக கூகுள் தரப்பு தெரிவித்துள்ளது.