ட்ரம்ப், ஸ்டார்மர் எக்ஸ் தளம்
உலகம்

ஈரான் போர் | விலகிய பிரிட்டன்.. பின்னடைவைச் சந்திக்கும் அமெரிக்கா!

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது.

Prakash J

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் தீவிரமடைந்து வரும் சூழலில், பிரிட்டன் தனது ராணுவத்தை ஈரானுக்கு அனுப்பாது என்றும், இந்த மோதலில் நேரடியாகத் தலையிடாது என்றும் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடியாகஅறிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. இதனால், இருதரப்பிலும் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணையால் உலகில் பல நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. ஹார்முஸை ஈரான் திறக்கும்பட்சத்தில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே, பிரிட்டன் தனது ராணுவத்தை ஈரானுக்கு அனுப்பாது என்றும், இந்த மோதலில் நேரடியாகத் தலையிடாது என்றும் பிரதமர் கீர் ஸ்டார்மர் அதிரடியாகஅறிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய பிரதமர் ஸ்டார்மர், "இதுஎங்கள் போர் அல்ல. இந்த மோதலில் நாங்கள் இழுக்கப்படுவதை விரும்பவில்லை. ஈரானுடன் போரிடுவது பிரிட்டனின் தேசிய நலனுக்கு உகந்தது அல்ல. தங்கள் நாட்டு வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பப் போவதில்லை. ஈரானுடனான போரினால் ஏற்படும் பொருளாதாரத் தாக்கங்களை (எரிபொருள் விலை உயர்வு போன்றவை) சமாளிக்க பிரிட்டன் தகுந்த தயார் நிலையில் உள்ளது.

அமெரிக்கஅதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரில் நேச நாடுகளின் ஆதரவை எதிர்பார்த்து வரும் நிலையில், பிரிட்டனின் இந்த விலகல் அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

trump

அதேநேரத்தில், அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாமல், தனது நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக ஸ்டார்மர் காட்டியுள்ள இந்தத் துணிச்சல், ஐரோப்பிய நாடுகளில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேரடியாகப் போரில் ஈடுபடாவிட்டாலும், பிரிட்டன் தனது கடற்படையைப் பயன்படுத்தி வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.