குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், அமெரிக்கக் குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் ராணுவத் தளவாடங்கள் உள்ள குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது நேற்று முதல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதன்படி, இன்று குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அத்தூதரகத்திலிருந்து புகை வெளியேறுவது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கெனவே, அந்நாட்டில் ஏவுகணை மற்றும் யுஏவி உள்ளிட்ட தாக்குதல்களை நடத்தி ஈரான் அச்சுறுத்திவரும் நிலையில், அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதல் அந்நாட்டு மக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான், குவைத்தில் வசிக்கும் தன் நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கத் தூதரகம் மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், அமெரிக்க குடிமக்கள் அனைவரும் தங்களின் இருப்பிடங்களிலேயே தங்குமாறும், வீட்டின் ஜன்னல்களில் இருந்து தள்ளி இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும், கட்டடத்தின் மிகக் கீழ்த்தளத்தில் தஞ்சம் புகுவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தற்போதைய சூழலில் அமெரிக்கத் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்றும், தூதரகப் பணியாளர்களும் தற்போது பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சாத்தியமான கூடுதல் தாக்குதல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், தங்களின் பாதுகாப்புத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறும் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக, இன்று அதிகாலை குவைத்தில் அமெரிக்காவின் F-15E போர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.