உலகம்

LinkedIn பயனர்களின் விவரங்களை திருடும் வட கொரிய ஹேக்கர்கள்? - எச்சரிக்கும் USA நிபுணர்கள்!

JananiGovindhan

அமெரிக்காவின் கிரிப்டோ கரன்சி நிறுவனங்களில் பதிவு செய்வதற்காக linkedin, indeed போன்ற பணிகள் தொடர்பான தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளவர்களின் சுய விவரங்களை வடகொரியாவைச் சேர்ந்த ஹேக்கர்கள் திருடியிருக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வட கொரியா அதிபர் கிங் ஜாங் உன் ஆட்சிக்கு ஆதரவாக நிதி திரட்டும் வகையில் மோசடி செய்பவர்கள், நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற முயற்சிப்பதாக Mandiant Inc-இன் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் Bloomberg செய்தி தளத்திடம் கூறியிருக்கிறார்கள்.

இப்படியாக கிரிப்டோ நிறுவனங்களின் தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம், வட கொரிய அரசாங்கம் தன்னுடைய எதிர்கால கிரிப்டோகரன்சி போக்குகளைப் பற்றிய தகவல்களைத் தொகுக்க முடியும் என்று மாண்டியன்ட்டின் வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள்.

வட கொரிய அரசாங்கத்தால் இதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை தவிர்க்க அனுமதிக்கும் வகையில், பியாங்யாங் கிரிப்டோகரன்ஸிகளை சலவை செய்ய இந்த தகவல்கள் உதவுகிறது. வட கொரியாவில் பணிபுரிவதாக சந்தேகிக்கப்படும் பலரும் ஃப்ரீலான்ஸ் ஊழியர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் மாண்டியன்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கிரிப்டோகரன்சி ஹேக் மற்றும் டிஜிட்டல் திருட்டில் ஈடுபடவில்லை என்று வட கொரியா தரப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, அமெரிக்க நிறுவனங்களை குறிவைத்து பல மில்லியன் டாலர் கணக்கான கிரிப்டோ கரன்சிகள் திருடப்பட்டதற்கு பின்னால் வட கொரியாவின் லாசரஸ் குரூப் என்ற ஹேக்கர்களே இருப்பதாக கருதப்பட்டது.

அதனை தொடர்ந்து, லாசரஸ் குரூப், புளூனோரோஃப் மற்றும் அன்டரியல் போன்ற வட கொரியாவைச் சேர்ந்த தீங்கிழைக்கும் இணையக் குழுக்களுடன் தொடர்புடைய நபர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால், 10 மில்லியன் டாலர் வரை வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.