போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் 10 நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகவும், 2 வாரங்களுக்கு ஈரான் மீதான போரை நிறுத்தப்போவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஈரானும் ட்ரம்பின் கருத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன்மூலம், வளைகுடா நாடுகளில் கடந்த 1 மாதங்களுக்கு மேலாக நிலவி வந்த போர் பதற்றம் சற்று தணியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான கடந்த 1 மாதகால போரின் போது நடந்த முக்கிய சம்பவங்கள் குறித்துப் பார்க்கலாம்.
பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது சுமார் 900 வான்வழித் தாக்குதல்களை நடத்தின. ஆபரேஷன் எபிக் ஃப்யூரி என்ற பெயரிலான இந்த நடவடிக்கையில், ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி காமேனி மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
மார்ச் 2 ஆம் தேதி போர் லெபனானுக்கும் பரவியது. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நேரடி மோதல் வெடித்தது.
மார்ச் 9 ஆம் தேதி அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
மார்ச் 21ஆம் தேதி ஈரான் தனது கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்தது, இது உலகளாவிய எண்ணெய் விலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஏப்ரல் 6 ஆம் தேதி ஈரானின் உளவுத்துறைத் தலைவர் மஜித் காதேமியை இஸ்ரேல் கொன்றது.
ஏப்ரல் 7ஆம் தேதி பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியால், அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.