உலகம்

“மக்களை புதுவிதமான வைரஸ் தாக்கும்” - 2022ம் ஆண்டு பற்றிய பாபா வங்கா பாட்டியின் கணிப்புகள்

EllusamyKarthik

2021-ஆம் ஆண்டு அடுத்த சில நாட்களில் முடிவுற உள்ளது. இந்த ஆண்டுடன் உலக மக்கள் சந்தித்து வரும் கொரோனா அச்சுறுத்தலுக்கு அதிவிரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 2022-ஆம் ஆண்டில் உலகம் அடியெடுத்து வைக்க உள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் ஆண்டு எப்படி இருக்கும் என கணித்து சொல்லியுள்ள பாபா வங்கா பாட்டியின் கணிப்புகள் என்ன சொல்கிறது என பார்க்கலாம். 

யார் இந்த பாபா வங்கா பாட்டி?

பல்கெரியாவை சேர்ந்த இவர் 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண் பார்வையை இழந்துள்ளார். அதனால் பார்வையை இழந்த அவர் ‘கடவுள் எனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை கொடுத்துள்ளார்’ என சொல்லி வருகிறார்.

கடந்த 1996 இல் அவருடைய 84 வது வயதில் காலமாகியுள்ளார். இருப்பினும் உயிரிழப்பதற்கு முன்னர் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என அவர் கணித்து சொல்லியுள்ளார். அவரது கணிப்புகளில் 85 சதவிகிதம் பலித்துள்ளது என்கிறனர் அந்நாட்டு மக்கள்.

அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்காவில் பயங்கரவாதிகள் 9/11 அன்று தாக்குவார்கள் என முன்கூட்டியே அவர் கணித்திருந்த கணிப்புகளை, உதாரணமிட்டு காட்டுகின்றனர் அவரது கணிப்பு மீது நம்பிக்கை கொண்டவர்கள். 

2022 எப்படி இருக்கும்?

“வரும் ஆண்டில் குடிநீருக்கான பஞ்சம் அதிகரிக்கும். ஆறு மற்றும் ஏரி மாதிரியான நீர் நிலைகள் மாசடைந்து வருவது இதற்கு காரணமாக இருக்கும். பெரும்பாலான மக்கள் மாற்று வழியில் அதற்கான தீர்வை காண முயற்சிகளை முன்னெடுப்பார்கள். 

வெப்பநிலையில் காணப்படும் மாற்றத்தால் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் (Locust) படையெடுத்து தாக்கக்கூடும். வேற்றுகிரகவாசிகளான ஏலியன்களின் அச்சுறுத்தல் இருக்கும். பெரும்பாலான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா வெள்ளத்தில் சிக்கக்கூடும். அதிகப்படியான டிஜிட்டல் சாதன பயன்பாட்டினால் உலக மக்களுக்கு நிஜத்திற்கும், கற்பனைக்கும் இடையில் குழப்பம் ஏற்படும். மக்களை புதுவிதமான வைரஸ் தாக்கும்” என பாபா வங்கா பாட்டி கணித்துள்ளதாக ஆஸ்ட்ரோ ஃபேம் என்ற வலைதளம் தெரிவித்துள்ளது.